ADVERTISEMENT

'என்னருகே நீயிருந்தால்...' வேறு படத்திற்கு எழுதிய பாடலை 'திருடாதே' படத்தில் பயன்படுத்திய கண்ணதாசன்!

06:34 PM Jun 11, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், திருடாதே படத்தில் இடம்பெற்ற 'என்னருகே நீயிருந்தால்...' பாடல் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும், சரோஜா தேவி கதாநாயகியாகவும் நடித்த திருடாதே என்ற படத்தை சின்ன அண்ணமாலை தயாரித்திருந்தார். இந்தப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த சின்ன அண்ணாமலைக்கு, திடீரென ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொண்டு படத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்தார். பின், சின்ன அண்ணாமலையை அழைத்த எம்.ஜி.ஆர் படத்தை கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்துவிடுங்கள் என்றார். அதன் பிறகு, அந்தப்படத்தை ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார். கால் முறிவு சரியான பிறகு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்வரை திருடாதே திரைப்படம் தயாரிப்பில் இருந்தது. பின், படம் வெளியானபோது பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றிபெற்று வசூலை வாரிக்குவித்தது.

சின்ன அண்ணாமலை மீது கண்ணதாசன் மிகுந்த மரியாதை வைத்திருப்பார். தேவகோட்டையைச் சேர்ந்தவரான சின்ன அண்ணாமலை தைரியமானவர்; வீரமானவர். நானெல்லாம் சினிமா ஹீரோ, இவர்தான் ரியல் ஹீரோ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர் கூறுவார். இந்தப்படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆனால், இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்னருகே நீயிருந்தால் பாடல் எம்.எஸ்.வி. இசையமைத்தது. வேறொரு படத்திற்காக எழுதிய பாடலை இந்தப்படத்தில் பயன்படுத்திக்கொண்டனர். சிக்கனமாக படம் எடுத்துக்கொண்டிருப்பதால் எம்.எஸ்.வியின் சம்மதத்தோடு கண்ணதாசனின் பாடலையே அவரது அண்ணன் பயன்படுத்திக்கொண்டார்.

'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்...' என்ற பாடலில் எம்.ஜி.,ஆரின் முகபாவனைகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் என எம்.ஜி.ஆர் கேட்க, உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் என்று சரோஜாதேவி எதிர்கேள்வி கேட்பார். இந்தப்பாடல் முழுவதும் கேள்விக்கு எதிர்கேள்வி, கேள்விக்கு பதில் என்ற வடிவிலேயே இருக்கும். கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் என எம்.ஜி.ஆர் கேட்க, மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் என்று சரோஜா தேவி கேட்பார். அடுத்த வரி 'வஞ்சியிடை கொஞ்சுவதேன் பிஞ்சுமொழி கெஞ்சுவதேன்...' என இருக்கும். பெண்களின் இடை ஆண்களின் இடையைவிட சற்று விரிந்து வளைவாக இருக்கும். கர்ப்ப காலத்தின்போது குழந்தையின் எடையையும் வயிற்றில் தாங்க வேண்டுமென்பதால் அது அவர்களுக்கு இயற்கை கொடுத்த சீதனம். இதற்கு, 'கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே' என சரோஜா தேவி பதில் கூறுவார். அதாவது, நாங்கள் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்தான் கணவனுக்கு கொடுக்கும் சீதனம் என்கிறார். அடுத்தடுத்த வரிகளை மிக அற்புதமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். 'இளமையிலே காதல் வரும்... எது வரையில்கூட வரும் என எம்.ஜி.ஆர் கேட்க, முழுமைப் பெற்ற காதலெல்லாம் முதுமைவரை ஓடி வரும் எனப் பதில் கொடுப்பார். பழகப்பழக பாலும் புளிக்கும் என்பார்கள். அதேபோல, குழந்தை பிறந்துவிட்டால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான காதல் குறைந்துவிடும் என்பார்கள். ஒரே பொண்டாட்டியோடு எப்படி வாழ்கிறார்கள் என்று அமெரிக்கா போன்ற வெளிநாட்டுக்காரர்களெல்லாம் நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள்.

'முழுமை பெற்ற காதல் முதுமைவரை ஓடிவரும்'. காதல் பல வகைப்படும். பார்வை காதல்... இந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது காதல் வயப்பட்டிருப்போம். உள்ளக்காதல்... இந்த வகையிலான காதல் சில பேர் மீது மட்டும் நமக்கு ஏற்பட்டிருக்கும். ஆத்மார்த்தமான காதல்... இந்த வகையிலான காதல்தான் இதயத்தில் சென்று நீங்காத நினைவாகப் பதிந்துவிடும். இந்த வகையிலான காதல் ஒருத்தர் மீது மட்டும்தான் வரும். அது திருமணத்திற்கு முந்தைய காதலாக இருக்கலாம்; மனைவியாக இருக்கலாம்; திருமணத்திற்குப் பிறகான காதலாக இருக்கலாம். இந்த உலகத்தில் எனக்கு இரண்டு ஆத்மார்த்தமான காதல் இருந்தது என்று யாராலும் கூறமுடியாது. அப்படி கூறுகிறார் என்றால் அது ஆத்மார்த்தமான காதலே கிடையாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாகக் காதலை வெளிப்படுத்தியிருப்பார் கண்ணதாசன். தமிழில் வெளியான சிறந்த நூறு காதல் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், இப்பாடலும் அதில் இடம்பெறும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT