Skip to main content

"மகன் பிறந்த ஒரு வருடத்தில் நான் இறந்துவிடுவேன்..." நடிகர் சிவகுமார் தந்தை சொன்ன அதிர்ச்சி ஜோதிடம்!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் சிவகுமார் தந்தையின் ஜோதிடம் கணிக்கும் திறமை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

லெனினுக்கு ஜோதிடம் சொன்னது, ஜெயகாந்தன் அப்பா ஜோதிடம் சொன்னது பற்றியெல்லாம் கூறுகிறீர்களே சமகாலத்தில் உள்ள யாருடனாவது ஜோதிடத்தைத் தொடர்புபடுத்திக் கூற ஏதாவது விஷயம் இருந்தால் கூறுங்கள் என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதனால் நடிகர் சிவகுமார் அண்ணனின் அப்பா ஜோதிடம் கூறிய விஷயம் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். சிவகுமார் அண்ணனின் அப்பா மிகப்பெரிய மனிதர். பல திறமைகளைக் கொண்டவர். பத்து கலைகளை ஒரே நேரத்தில் செய்பவரை தசாவதானி என்பார்கள். எட்டு கலைகளை ஒரே நேரத்தில் செய்பவரை அஷ்டாவதானி என்பார்கள். நூறு கலைகளை ஒரே நேரத்தில் செய்பவரை சதாவதானி என்பார்கள். அந்தக் காலத்திய ஆட்களின் மூளை பக்குவம் அந்த அளவிற்கு இருந்தது. இன்றைய காலத்து ஆட்களிடம் அந்த அளவிற்கான மூளை பக்குவம் இல்லை. நான் நடிகனான பிறகு எனக்குப் பத்துக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளின் கார் நம்பர் மனப்பாடமாகத் தெரியும். பத்திற்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் மனப்பாடமாக தெரியும். ஆனால், தற்போது என்னுடைய கார் எண்ணையே நினைவில் வைக்க சிரமமாக உள்ளது. இன்றைக்கு மூளை இப்படி மாறிவிட்டது. 

 

நடிகர் சிவகுமாரின் அப்பா ஐந்து விஷயத்தில் மிகப்பெரிய ஆள். எங்கு தண்ணி இருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லிவிடுவார்; வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஜோசியம் சொல்வார்; சாலையில் ஒரு வண்டி செல்கிறது என்றால் அந்த வண்டியில் எத்தனை பேர் செல்கிறார்கள் என்பதை சரியாகச் சொல்லிவிடுவார்; நேற்று என்ன சட்டை போட்டிருந்தோம் என்பதையும் சரியாகச் சொல்லிவிடுவார்; தொலைந்துபோன பொருளை யார் எடுத்திருப்பார்கள் என்பதைச் சரியாகச் சொல்வார். கோவை சூலூர் அருகேயுள்ள காசி கவுண்டன்புதூர் அவருடைய சொந்த ஊர். அவரது மாமியார் ஊர் பல்லடம் பக்கத்தில் உள்ள கல்லாடம்பாளையம். ஒருமுறை அந்த ஊருக்கு இவர் சென்றிருக்கிறார். கடுமையான தண்ணீர் பஞ்சம் அந்த ஊரில் இருந்திருக்கிறது. அந்த விஷயத்தை இவரிடம் கூறியதும் இவர் ஒரு இடத்தில் தோண்டும்படி கூறியுள்ளார். அந்த இடம் கடுமையான பாறைகள் நிறைந்த இடமாக இருந்ததால் அந்த ஊர் மக்களுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்துள்ளது. பின் சிவகுமாரின் அப்பா உறுதியாகக் கூறியதால் தோண்ட ஆரம்பித்துள்ளனர். அந்த இடத்தில் தண்ணீர் நீருற்றுபோல வந்திருக்கிறது. மழைக்காலம், வறண்டகாலம் என எல்லா காலங்களிலும் கிட்டத்தட்ட 85 ஆண்டுகாலமாக தண்ணீர் இன்றும் வந்துகொண்டிருக்கிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஒரு முன்னணி பத்திரிகை, அந்த ஊரில் சென்று பேட்டியெடுத்து இந்த விஷயத்தை அவர்கள் பத்திரிகையிலும் போட்டிருந்தார்கள். 

 

நடிகர் சிவகுமார், அவர் அம்மாவின் வயிற்றில் கருவாக உருவாகியிருந்தபோது அவரது அப்பா ஒரு கடிதத்தை எழுதி மனைவியிடம் கொடுக்கிறார். அந்தக் கடிதத்தில் எனக்குப் பிறக்கபோவது ஆண் குழந்தை; இந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் நான் இறந்துவிடுவேன்; அப்படி இறக்கவில்லை என்றால் அவன் எனக்குப் பிறந்தவனல்ல என எழுதியிருந்தார். சில மாதங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. அவர் கணித்தது போலவே ஆண் குழந்தை பிறந்திருந்தது. இது மகிழ்ச்சி தரக்கூடிய கணிப்பாக இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் துயரமான கணிப்பும் வர இருந்தது. 

 

'டேய் கண்ணுமணி... ஒரு வருசத்துக்குள்ள என்னைத் தூக்கி சாப்பிட போறியாடா... ஏன்டா என்ன தூக்கி சாப்பிட போற...' என சிவகுமாரை கையில் எடுத்துக் கொஞ்சும்போதெல்லாம் அவர் அப்பா கூறுவாராம். சரியாக சிவகுமார் பிறந்து பத்தாவது மாதத்தில் அவர் அப்பா இறந்துவிடுகிறார். இறக்கும்போது அவருக்கு வயது 33. பின்பு அவர் அப்பாவின் இறுதிச்சடங்கெல்லாம் முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அதுவரை தவழ்ந்துகொண்டிருந்த சிவகுமார், அன்றுதான் முதல்முறையாக சுவற்றைப் பிடித்து எழுந்து நின்றுள்ளார். அந்த சுவற்றைப் பிடித்து நின்றுகொண்டிருந்த சிவகுமார், வந்தவர்களைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாராம். அதைப் பார்த்து, 'அப்பன தூக்கி சாப்பிட்டு என்ன தெனாவட்டா சிரிக்கிறான் பாரு...' என்று அங்கு வந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

 

நடிகர் சிவகுமாரின் தந்தை இதுவரை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொண்டதில்லை. நான் அற்ப ஆயுளில் இறந்துவிடுவேன். என் ஃபோட்டோவை வைத்து வருஷாவருஷம் கும்பிடுவதோ, திதி கொடுப்பதோ இருக்கக்கூடாது என்று சொல்லி ஒரு ஃபோட்டோகூட அவர் எடுத்துக்கொண்டதில்லை. நான் பிறந்தேன், வள்ர்ந்தேன், இறந்தேன் என்று மட்டும் இருந்துவிடட்டும். என்னுடைய நினைவாக இதை மட்டும் வைத்துக்கொள் என்று கூறி முருகனின் புகைப்படம் ஒன்றை மட்டும் மனைவியிடம் அவர் கொடுத்துள்ளார். சிவகுமாரிடம் இன்று இருக்கும் மனப்பாட ஆற்றல் மற்றும் ஒழுக்கம் அவருடைய அப்பாவிடம் இருந்து அவருக்கு வந்ததுதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைமாமணி ராஜேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, கமல்

Published on 21/09/2022 | Edited on 22/09/2022

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தார் கலைமாமணி நடிகர் ராஜேஷ்.
ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் திரைத்துறை வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசையிருந்தது; அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்

 

திரைத்துறையில் இயற்கையான நடிகர் என்று பாராட்டப்பட்ட ராஜேஷ் சுமார் 45 ஆண்டுகளில் 150 படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார்.

 

நக்கீரன் யூடியூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேர்காணல் செய்திருந்தார். நான்கு தொடராக வந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு  நியமித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கலைமாமணி நடிகர் ராஜேஷை நேரில் அழைத்தது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவித்து, நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனும் நடிகர் ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் பொறுப்பேற்று கொண்டதை அறிந்த சிவகுமார், தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் நடிகர் ராஜேஷுக்கு வழங்கி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

tamilnadu goverment appointed actor rajesh as a head of tamilnadu goverment m.g.r film training centre

 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.