பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் நேற்று (28.11.2021) காலமானார். சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்புக்குத் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், மாஸ்டர் சிவசங்கர் இறப்புக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சிவசங்கர் மாஸ்டரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகத்தான திறமை மற்றும் பல தசாப்தங்களாக இந்திய சினிமாவுக்குப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோனு சூட், பிரபு தேவா, சரத்குமார், ஆரி அர்ஜுனன், இயக்குநர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி, சேரன், நவீன் முஹம்மது அலி, நடிகைகள் காஜல் அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றிய சிவசங்கர் 'மகதீரா' படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.