தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் பாலகிருஷ்ணா, இந்துபூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வான இவர், மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் மகன் ஆவார்.
இவர், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்துபூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே திரண்டிருந்த தொண்டர்களில் ஒருவர், அவரை மொபைல் ஃபோனில் படமெடுக்க முயன்றார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா, அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும், எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அழிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அங்கே திரண்டிருந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
தன்னுடைய நிதானத்தை இழந்து இத்தகைய செயல்களில் பாலகிருஷ்ணா ஈடுபடுவது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.