தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன் அர்ப்பணிப்பான நடிப்பை கொடுப்பவர்களில், இன்றைய காலகட்டத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுபவர் விக்ரம். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.
கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விக்ரமிற்கு தங்கலான் படப்பிடிப்பின் போது விபத்து நடந்துள்ளதாக விக்ரமின் மேலாளர் சூர்யா நாராயணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளது. இதனால் சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பில் தொடர முடியாது. விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என உறுதியுடன் இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.