44வது செஸ் ஒலிம்பியாட், சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று (28/07/2022) கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியின் தொடக்க விழாவிற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார். இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன. இதனை முன்னிட்டு போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் தற்போது செஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு. அனைத்து செஸ் போட்டியாளர்களும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் செஸ் விளையாடுவது போல் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.