ADVERTISEMENT

"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1

09:39 PM Jun 03, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


அந்த அதிகாலை விடியலின் ஒளி கூட ஒட்டுமொத்த உலகிற்கும் நிரூபிப்பது முதல் மைக்ரோ நொடிக்குள் தான்! ரகசியங்களை ரகசியமாகவே சுமந்த உலகின் இருள் சொரிந்த பக்கங்கள் அனுபவித்த சுகங்களும், பாரங்களும், துயரங்களும் அந்தக் கணத்தில் நிகழ்ந்தவையே. நிறை சூல் பெண்ணின் அடிவயிற்றை முட்டி மோதி தன் பிறப்பை உறுதி செய்யும் அந்த மைக்ரோ நொடிகள் தான் ஒரு உயிரின் ஜனனம்.

ADVERTISEMENT


ஆகச் சிறந்த காதலின் பேரில் யாரோ ஒருவனின் மகளின் உன்னதத்தை ருசி பார்க்கும் அந்தக் காதலனின் அணைப்பில் அவள் மயங்குவதும் அந்த மைக்ரோ நொடிகளே! வாள் முனையைக் கூர் செய்து தன் எதிரியின் தலைசீவும் மாவீரனின் வெற்றிக் கனியும், இரவு முழுவதும் இலக்கியத்துடன் கலவி புரிந்த கவிஞன் அதிகாலையில் அவசர கதியின் கவிதைக் குழந்தையைப் பிரசவிப்பதும், ஒரு நொடிக்குள் தனக்கே நெருப்பு வைத்துக் கொள்ளும் மெழுகு வர்த்தியும்தான் இங்கே மைக்ரோ விநாடிகள், அதன் இருட்டைப் போக்கும்திறனே ஹாட்ரிக் முடிவுகள்.

60 தினங்களின் தொடக்கத்தில் நாளைய விடியல் என்னும் கேள்விக்குறியைச் சுமந்த சாமானியனின் மூளையில் பிரேக்கிங் நியூஸூம் லூடோக்களும் நிறைந்த ஒரு வெறுமையான வாழ்க்கைக்கு நம்மைத் தள்ளிய ஹூவான் நகரின் கடல் வியாபார சந்தையின் இறால்களுக்கு இடையில் பிறந்த கரோனாவுக்கும் ஆழங்கள் தேடித் திரியும் அலைகளின் நுனியில் சிக்கிய நுரைகளைப் பின்தொடரும் மணல் துகள்களுக்குள் கண்ணாமூச்சு காட்டும் நண்டுகளின் மண் மறைவிலும் அந்த நொடிகளின் தாக்கம் இருந்திருக்கிறது. அந்த மைக்ரோ விநாடி சிந்தனைகளும் முடிவுகளும் மனிதன் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைதான் அந்த மைக்ரோ நொடிகள் சொல்லப் போகிறது."


இதயக் கீழ் அறை நோக்கி தமனிகள் சுமந்து செல்லும் உயிர்வளிக் குருதியைப் போல பல தகவல்களையும் அது சுமந்து செல்கிறது. இள ரத்தம் அதான் இத்தனை சுறுசுறுப்பு என்று நம் தமிழ் சினிமாக்களில் டயலாக் கேட்டு இருப்போமே அதைப் போலத்தான். கட்டளைகளின் வீரியத்தை அதன் செயல்பாடுகளைச் சரியானது என்னும் மன நிலைமையை மூளைக்கும் இதயத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு நிலை. மூளையின் மையப்பகுதியில் காணப்படும் டோபமைன் என்னும் இராசாயன அளவு இவ்வகை மனிதர்களிடம் அதிகம் இருக்குமாம். அவர்கள்தான் சைக்கோக்கள் என்று நம்மால் அழைக்கப்படுகிறார்கள்.

அது சரி சைக்கோ எப்படியிருப்பார்கள், இரத்தச் சிவப்பில் கண்களுடன், எப்போதும் கையில் ஒரு கூர்மையான ஆயுதத்துடன் யாரைக் கொல்லலாம் என்ற நினைப்போடு சுற்றிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தால் நிச்சயம் அவர்கள் இல்லை. மக்களுடன் மக்களாக நம்முடனே பயணிப்பவர்கள் அவர்களின் மனம் சட்டென பிறழும் அந்தத் தருணத்தில் ஏற்படும் மாற்றமே சைக்கோத்தனம். நாவின் உணவுச்சுரப்பிகளின் சுவைமொட்டைப் போல அவர்களுக்கு தாங்கள் செய்யும் குற்றங்களின் சுவை பிடித்துப் போகுமாம். குறிக்கோள்கள் அற்ற உணர்ச்சிகள் அற்ற மனநிலையை உடையவர்கள். பிறரின் வலி அவர்களுக்கு இனிமையாக இருக்கும். பலவீனமானவர்கள்தான் இவர்களின் இலக்கு. பெற்றோர்களின் வன்முறைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் கூட அதற்கு உதாரணம். தன் கை ஓங்கியதும் குழந்தை பயந்து சுவரோடு மண்டிக் கொண்டு நிற்கும் போது பெற்றோரின் கண்களில் தோன்றும் அதீத ஒளி கூட சைக்கோத்தனத்தின் ஆரம்பம்தான்.


வலியின் உச்சம் குருதியின் வெளிப்பாடு என்பதை மறுக்கும் படியாக சர்வாதிகார மனப்பான்மையை ஊக்குவிக்கும் வீடியோ கேம்கள். சோழவந்தானில் பாட்டியே பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் ஊற்றி தரையில் அடித்துக் கொன்ற கொடூரம். இவை கூட ஒருவகையில் சைக்கோத்தனத்தின் வெளிப்பாடுகள்தான். மனித உடலின் டிராகுலாச் செல்கள் நாடெங்கும் நடத்திய தொடர் கொலைகள்தான் அந்த 'மைக்ரோ நொடிகள்'. வரலாற்றிற்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சிங்கப்பூரின் மாபெரும் வீழ்ச்சி என்று கருதப்பட்ட பசுபிக் போரின் ஒரு பகுதியாக 1942 இல் நடைபெற்ற போர். பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களை எதிர்ப்பவர்களையும், போராட்டக்காரர்களின் தலையையும் பிரிட்ஜின் மேல் உள்ள வளைவுகளில் கட்டி தொங்கவிட்டு இருப்பார்களாம்.


அதைப்பார்க்கும் போது தங்களை எதிர்க்க யாருக்கும் தைரியம் வராது என்பது அன்றைய அரசின் நோக்கமாக இருந்தது. அதே சிங்கப்பூரில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சைக்கோ கொலைச் சம்பவம் தான் வரும் தொடரின் முதல் அத்தியாயம். வரும் வாரத்தில் இருந்து....! குழந்தைகள் கூடி விளையாடும் பார்க் ஒன்றின் படரும் செடிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த வளைவுகளில் இரத்தத் தீற்றலோடு ஒரு மனிதத் தலை உயிரற்ற ஒரு சிரிப்பை உதிர்த்தபடி......!

நொடிகள் விரியும்.......!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT