krishnagiri district youth police seized

Advertisment

கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனத்தில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் 50 கிலோ வெடி பொருள்களை சட்ட விரோதமாக கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் என்.ஹெச். சாலையில் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன், கந்திக்குப்பம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ மயில்வாகனன் ஆகியோர் கடந்த 17- ஆம் தேதி இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் மாட்டி இருந்த ஒரு பையை சோதனை செய்தபோது அதில், 200 ஜெலட்டின் குச்சிகள், அவற்றை வெடிக்க செய்யும் 400 டெட்டனேட்டர் உபகரணங்கள் மற்றும் 50 கிலோ வெடி மருந்து ஆகியவை இருந்தன. இதுகுறித்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அம்ருதீன் தெருவை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) என்பது தெரிய வந்தது.

Advertisment

ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வெடிபொருட்களை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் லத்தீப்பை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. எதற்காக வெடி பொருள்களை கொண்டு வந்தார்,யாருக்காக கொண்டு செல்கிறார்,யாரிடம் வங்கினார் என்ற விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.