Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; டெல்லியில் இருந்து வரும் ஆர்டர்; நிறைவேற்றும் தமிழக கும்பல் பகுதி – 17 

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

digital-cheating-part-17

 

இந்தியாவில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் டிஜிட்டல் மோசடி குழுக்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது அது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலும் கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றங்களில் பெயர் பெற்றதும், நாம் முந்தைய பகுதிகளில் கண்டதுமான ஜார்கண்ட்  மாநிலத்தின் ஜம்தாரா போல் கோயம்புத்தூரிலுமா என அந்த சம்பவம்  தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. 

 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு அடிக்கடி யாராவது ஒருவர் வந்து ‘என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போயுள்ளது’ என புகார் தந்தபடி இருந்தனர். அந்தப் புகார்கள் எல்லாம் சைபர் குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்டத்தில் பெறப்பட்ட 14 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டன. 2023 ஜனவரி முதல் பிப்ரவரி வரை 11 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் போடப்பட்டன. பதிவு செய்யப்படாத புகார்கள் பல இருந்தன.  

 

டிஜிட்டல் சதுரங்கவேட்டை;  இந்தியாவுக்கு ஆன்லைன் மோசடியை அறிமுகப்படுத்தியவர்! பகுதி – 16



2023 பிப்ரவரி மாதம் சிவகங்கையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று, ‘எனது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் எனது ஏ.டி.எம் கார்டு முடக்கப்படவுள்ளது. உடனே கீழ்கண்ட லிங்க்கை ஓப்பன் செய்து பான் எண்ணை பதிவிடவும் என இருந்தது. அது தமிழ்நாடு எண்ணாக இருந்ததால் நானும் நம்பி லிங்க்கை ஓப்பன் செய்து பான்கார்டு எண்ணை பதிவு செய்தேன். அடுத்ததாக அதிலிருந்த காலத்தில் வங்கியின் ஆன்லைன் யூசர் நேம், கடவுச்சொல் ( பாஸ்வேட்), மொபைல் எண்ணை கேட்டிருந்தார்கள்; அதையும் பதிவு செய்தேன். அதை பதிவு செய்ததும் ஒரு ஓ.டி.பி வந்தது, அதனை அந்த லிங்க்கிலேயே பதிவு செய்தோம்,. நன்றி என பதில் மெசேஜ் வந்தது. நானும் அப்படியே விட்டுவிட்டேன். சில மணி நேரத்துக்குப் பின்னர் எனது வங்கிக் கணக்கில் இருந்து 99,887 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது’ என புகார் தந்தார். 

 

புகாரை வாங்கிய சிவகங்கை சைபர் பிரிவு போலீசார், முத்துக்கருப்பன் மொபைல் எண்ணுக்கு வந்த எஸ்.எம்.எஸ், எந்த எண்ணில் இருந்து வந்தது எனப் பார்த்தனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிச் ஆஃப் என வந்தது. அந்த எண்ணை ட்ராக் செய்தபோது, சிம்கார்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அந்த சிம் பயன்படுத்திய மொபைலின் ஐ.எம்.இ.ஐ எண்ணை எடுத்து, அதில் இப்போது என்ன சிம் பயன்படுத்தப்படுகிறது எனப் பார்த்தனர். அதில் வேறு ஒரு கம்பெனியின் சிம்கார்டு இருந்தது. அந்த கான்டாக்ட் எண்ணை எடுத்தனர். அந்த ஐ.எம்.இ.ஐ எண்ணை ஆராய்ந்தபோது அந்த மொபைலில் ஒரே நாளில் 40 சிம் கார்டு மாற்றப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியாகினர். அப்படி மாற்றப்பட்ட சிம்கார்டு எண்களை தனியே எடுத்து வைத்துக்கொண்டனர். 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: ‘மே பேகுனா சாப்’ - டெக்னாலஜியில் மிரட்டும் வடமாநில கும்பல்!

 

இப்போது அந்த மொபைல் எங்குள்ளது என ஆராய்ந்தபோது, டவர் லொக்கேஷன் கோயம்புத்தூர் மாநகரம் எனக் காட்டியது. அந்த மொபைலில் நெட் கனெக்‌ஷன் இருந்தது. அது ஆன் ஆனதும் அந்த மொபைலில் பயன்படுத்தும் இமெயில் முகவரியை ட்ராக் செய்து அதனையும் ஆய்வு செய்தனர். 

 

டெக்னிக்கலான ஆவணங்களை தயார் செய்துகொண்டு சிவகங்கையில் இருந்து கோவைக்கு தனிப்படை சென்றது. கோவை மாநகர காவல்துறையின் சைபர் டீம், சம்மந்தப்பட்ட ஏரியா காவல்நிலையம், குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து களத்தில் இறங்கியது சிவகங்கை போலீஸ் டீம்.   கோவை பீளமேட்டில் சிக்கா மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ஒரு அலுவலகம் செயல்படுவதை கண்டறிந்தனர். 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: 20 வயது இளைஞர் திருடிய 10 கோடி ரூபாய்! பகுதி – 14

 

வெளியே சிம்பளாக இருந்த அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்து பார்த்தபோது மாடர்னாக நன்றாக இருந்தது. உள்ளே 19க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 11 லேப்டாப்கள், டேபிள்கள் இருந்தன. கம்ப்யூட்டர்களில் பெண்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டு இருந்தனர். அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். உள்ளிருந்து 292 செல்போன்கள், 22,735 சிம் கார்டுகள், 24 மோடம், 9 ஏ.டி.எம் கார்டுகள், 9 செக்புக் போன்றவற்றை கைப்பற்றினர். இந்த சென்டரை கோவையைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி பாரதி ஆகிய இருவரும் நடத்தி வந்தனர். 

 

இந்த சென்டரில் 10 பெண்கள் வேலை செய்துள்ளனர். இவர்களின் வேலையே  ஒவ்வொருவரும் தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எஸ்.எம்.எஸ்களை அவர்கள் தரும் மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். நம்பர் அனுப்புவது மட்டுமே இவர்களது வேலை. சரவணன், பாரதிக்கு நாச்சியார்பாளையம் ராம்குமார், காரமடை வினோத்குமார், கோவை சானாவாஸ், உமர்முகமது, பரத்பாலாஜி, திருச்சி ஜெயராம், தூத்துக்குடி மாரீஸ்வரன், பொள்ளாச்சி சந்தோஷ்குமார், தென்காசி மூர்த்தி போன்ற சிம்கார்டு கம்பெனியின் ஏஜென்ட்கள் விதிமுறைகளை மீறி மொத்தமாக சிம்கார்டுகளை தந்துள்ளனர். இதற்கு இவர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் கைமாறியுள்ளது.

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; முதலமைச்சரின் மனைவியை ஏமாற்றிய நபர்! பகுதி 13

 

சிம் கார்டு வாங்க ஐடி கார்டு, ஆதார் கார்டு எப்படி கிடைத்தது என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம். இந்த விவகாரத்தில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  தினமும் 3 லட்சம் எஸ்.எம்.எஸ்களை இந்த அலுவலகத்தில் இருந்து மக்களுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 5 வருடங்காக இருந்த அலுவலகம் கோவையில் செயல்பட்டு வந்துள்ளது. எஸ்.எம்.எஸ் அனுப்பும் வேலையை சரவணனுக்கு தந்தது டெல்லியில் உள்ள ரஹீப் குர்ஷித் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு எஸ்.எம்.எஸ்க்கு 30 காசுகள் ரஹீப் குர்ஷித் தந்ததாகக் கூறப்படுகிறது.

 

யார் அந்த ரஹீப் குர்ஷித் என விசாரித்தவர்கள், இப்போது அவனைத் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த ஓரிடத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட சென்டர் உள்ளதா? அல்லது தமிழகத்தைத் தாண்டி வேறு எங்கெல்லாம் உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர். வட இந்திய ஆன்லைன் மோசடி கும்பல்கள் இந்தியா முழுவதுமே பரவியுள்ளது. இது சைபர் பிரிவு போலீசாரை கவலைகொள்ளச் செய்துள்ளது. 

 

இவர்கள் எப்படி இவ்வளவு சிம் கார்டுகளை வாங்கினார்கள்? அந்த சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்வதற்கான ஆதார் அல்லது ஏதாவது ஒரு ஐடி கார்டு இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நாடு முழுவதும் பரவி வரும் இந்த சைபர் குற்றவாளிகள் செய்து வரும் குற்றங்கள் என்னென்ன? 


வேட்டை தொடரும்…

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.