Skip to main content

அன்று ஜாதிப்பெயரை சொல்லி அழைத்தார்கள்; இன்று ஸ்டைலிஸ்ட் என்கிறார்கள்... இமேஜை மாற்றிய சி.கே.குமரவேல் | வென்றோர் சொல் #38

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

ck kumaravel

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை ஒருபடி உயர்த்திக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது சிகையலங்காரம். சங்ககாலந்தொட்டு இன்றைய டிஜிட்டல் காலம்வரை ஆண், பெண் என இருபாலருமே சிகையலங்காரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர். உடல் அலங்காரம் மற்றும் ஆடை அலங்காரம் குறித்த எண்ணம் இல்லாதவர்கள்கூட சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. ஆனால், தனிமனிதனின் புறத்தோற்ற அழகைத் தீர்மானிக்கக்கூடியவற்றில் ஒன்றாக இருக்கும் முடி மற்றும் கூந்தல் அலங்காரத் தொழிலோ, இந்தியச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறைச் சிக்கலுக்கு இரையாகியிருந்தது. குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே அந்தத் தொழிலைச் செய்யவேண்டுமென வகைப்படுத்தப்பட்டு, அது அவர்களின் குலத்தொழிலாகவும் மாற்றப்பட்டிருந்தது. அந்தச் சமூகத்தினருக்குக் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட ஊர் பொதுநிகழ்வுகளில் முதல்மரியாதை அளிக்கப்பட்டாலும் திருவிழா அல்லாத மற்றநாட்களில் அவர்களது வாழ்க்கை சாதிய ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு இருந்ததை மறுக்கமுடியாது.

 

காலப்போக்கில் நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் நவீனமயம், பல தொழில்களில் நிலவிய இத்தகைய சாதியக்கட்டமைப்பை அடியோடு வேரறுத்தது. அந்த வகையில், முடி திருத்தம் மற்றும் சிகை அலங்காரம் தொழிலில் நிலவிய சாதியக் கட்டமைப்பை நவீனமயத்தின் துணையோடு வேரறுத்துள்ளார், சி.கே.குமரவேல். சிகை அலங்கார முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக 600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கும் இவரது நேச்சுரல்ஸ் நிறுவனம், இத்தொழிலுக்கே இன்று புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 

சின்னி கிருஷ்ணன் மற்றும் ஹேமலதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சி.கே.குமரவேல். கடலூரைப் பூர்வீகமாக கொண்ட சி.கே.குமரவேலுக்கு மொத்தம் ஐந்து உடன்பிறந்தவர்கள். தந்தை பார்மா பொருட்களை மொத்தமாக வாங்கி சிறுசிறு பாக்கெட்டுகளில் அடைத்து மருந்தகங்களில் விற்பனை செய்யும் தொழில் நடத்திவந்தார். பள்ளிப்படிப்பை கடலூரில் முடித்த சி.கே.குமரவேல், ஊட்டச்சத்துப் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பட்டம் பெறுகிறார். கல்லூரி படிப்பிற்குப் பிறகு, தன்னுடைய அண்ணன்களோடு இணைந்து அவர்கள் நடத்திவந்த தொழிலில் சிறிது காலம் ஒத்தாசையாக இருந்தார். ஒருகட்டத்தில் தனியாக தொழில்தொடங்கவேண்டும் என முடிவெடுத்து, ராகா என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். ராகா சீகைக்காய், ராகா சோப், ராகா எண்ணெய் என முதல் மூன்று தயாரிப்புகளும் வரிசையாகத் தோல்வியைத் தழுவுகின்றன. நான்காவதாக வெளியான ராகா தயாரிப்பு வெற்றியடைகிறது.

 

அந்த வெற்றியைக் கொண்டாட ஆரம்பிப்பதற்கு முன்னரே தயாரிப்பு முறையில் ஏதோ குறைபாடு இருக்கிறது எனப் புகார்கள் எழ ஆரம்பித்தன. இறுதியில் நான்காவது தயாரிப்பும் தோல்வியைத் தழுவுகிறது. அதிலிருந்து மெல்ல மீண்டுவந்த சி.கே.குமரவேல், பின்னாட்களில் நேச்சுரல்ஸ் என்ற நவீனமான சிகை அலங்காரகம் தொடங்குகிறார். கடந்தகாலத் தோல்விகளில் இருந்து கற்ற பாடத்தின் துணையுடன் மெல்ல காலடி எடுத்துவைக்க ஆரம்பித்த சி.கே.குமரவேல், இன்று 600க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் அதிபதியாக உயர்ந்து நிற்கிறார்.

 

naturals

 

"கல்லூரி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் வாழ்க்கை தொடங்குகிறது என்று உறுதியாக நான் நம்புகிறேன். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் கல்லூரிக் காலத்திற்குப் பிறகே நாம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். என் வாழ்க்கையில் கல்லூரிக்கட்டத்தை நிறைவுசெய்த பிறகு, என்னுடைய இரு அண்ணன்களுடைய தொழிலிலும் சிறிதுகாலம் ஒத்தாசையாக இருந்தேன். அந்த நேரத்தில் எனக்குத் தோன்றும் எண்ணங்களைத் தொழில்ரீதியான ஆலோசனைகளாக அவர்களுக்குக் கூறுவேன். அவர்கள் நான் கூறிய ஆலோசனைகளை நிராகரிப்பதற்குப் பதில், வயதில் சிறியவன் நீ என்று கூறி என்னையே நிராகரித்துவிடுவார்கள். இது எனக்கு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் நாம் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து ராகா என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

 

வரிசையாக மூன்று தோல்விகள். நான்காவது தயாரிப்பு வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்த வேளையில், தயாரிப்பு கோளாறு காரணமாக மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதுவரை தோல்விகளின்போது பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத எனக்கு இந்தத் தோல்வி மிகுந்த பயத்தைக் கொடுத்தது. மகாபாரதத்தில் அபிமன்யூவைப் பிரச்சனைகள் சூழ்ந்ததைப்போல என்னைச் சுற்றி பல பிரச்சனைகள் இருந்தன. என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்க ஆரம்பித்துவிட்டனர். என்னுடைய நலம்விரும்பிகள் அனைவரும் நான் தோற்றுவிட்டதாகக் கூறினார்கள். மன அமைதிக்காக சபரிமலை, திருப்பதி என மாறிமாறி சென்றுகொண்டிருந்தேன். அடுத்து என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் இருந்த நேரத்தில், இன்னவேட்டிவ் சீக்ரட்ஸ் ஆஃப் சக்ஸஸ் (Innovative Secrets Of  Success) என்ற புத்தகத்தை ஒரு புத்தகக்கடையில் பார்க்க நேர்ந்தது. என்னுடைய நல்ல நேரம் அது புத்தகமாக இல்லாமல் ஆடியோ கேசட்டாக இருந்தது. அதை முழுவதுமாகக் கேட்ட பின்பு என்னுடைய வாழ்க்கையே மாறியது.

 

கடந்தகால வலிகளில் இருந்து மெல்ல மீண்டுவந்த நான், இன்று 685 சலூன்கள் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைபார்க்கும் ஒரு மிகப்பெரிய பிராண்டையும் 400க்கும் மேற்பட்ட பெண் தொழிலதிபர்களையும் உருவாக்கியுள்ளேன்". இவ்வாறு சி.கே.குமரவேல் சாதித்திருப்பது தொழில்ரீதியான வெற்றி மட்டுமல்ல. முடி திருத்தும் தொழில் செய்பவர்களுக்கான சமூக மரியாதையையே பெற்றுத்தந்துள்ளார். ஒரு காலத்தில் முடி திருத்துபவர்கள் சாதி அடையாளத்துடன் அழைக்கப்பட்டது மாறி இன்று மரியாதையுடன் ‘ஸ்டைலிஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த சமூக மாற்றத்தில் சி.கே.குமரவேலின் ஐடியாவுக்கும் முக்கிய பங்குண்டு.

 

கடந்தகாலத் தோல்விகளில் இருந்து எவரொருவர் அக்னிப் பறவைபோல மீண்டெழுந்து வருகிறாரோ, அவரையே வெற்றியன்னையின் கரங்கள் அரவணைக்கின்றன. தன்னுடைய தோல்விகளில் இருந்து மீண்டு வந்தது குறித்து ஒரு பேட்டியில் கூறிய சி.கே.குமரவேல், "நான் ராகா நிறுவனம் தொடங்கியபோது முதல் வருடத்தில் 6 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யவேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து உழைத்தேன். அந்த இலக்கை ஓரளவிற்கு நான் நெருங்கிவிட்டாலும், இதுபோன்று அளவு நிர்ணயம் செய்து உழைப்பது எவ்வளவுத் தவறானது எனப் பாடம் படித்துக்கொண்டேன். நேச்சுரல்ஸ் நிறுவனம் தொடங்கியபோது மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டினால் போதும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அளவு சிறியது எனும்போது அதை அடைவதற்கான வழியும் எளிமையாக இருந்தது. இங்கிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்ய முடிவெடுத்துவிட்டால் டெல்லிவரைக்குமான பாதை நாம் நிற்கும் இடத்திலேயே கண்களுக்கு புலப்பட்டால்தான் பயணத்தைத் தொடங்குவேன் என்று நாம் இருப்பதில்லேயே? கண்ணுக்கெட்டிய தூரம்வரை பயணிக்கிறோம். அந்த இடத்தை அடையும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தின் எல்லை விரிவடைவதைப்போல, குறுகிய இலக்கை நோக்கிப் பயணித்து, அந்த இடத்தை அடையும்போது இலக்கை விரிவாக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும். இதுதான் வெற்றியை நோக்கி பயணிப்பதற்கான சரியான மற்றும் எளிமையான வழியாகும்" என்றார். வெற்றிதாகம் கொண்ட அனைவருக்கும் சி.கே.குமரவேலின் இந்த வார்த்தைகள் எனர்ஜி டானிக்தான்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.