Skip to main content

'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

padmasingh isaac

 

"ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள்தான் தொழிலில் எனக்குப் போட்டியாளர்கள். அவர்களது வழக்கமான சமையலைவிட ஒருபடி சிறந்த சமையலை என்னுடைய நிறுவனத் தயாரிப்பு பொருட்கள் உறுதிசெய்தால் நான் வென்றுவிட்டதாக அர்த்தம்" என்கிறார் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக். ஆச்சி மசாலா... கடந்த 20 ஆண்டுகளாக தமிழர்களின் சமையலறையில் கோலோச்சிவரும் ஒரு நிறுவனம். ஆச்சி குழம்பு மிளகாய்த்தூள் என்ற ஒரு தயாரிப்பு பொருளோடு நிறுவனத்தைத் தொடங்கி தன்னுடைய அசாத்தியமான உழைப்பாலும் தொழில்முனைவு நுட்பத்தினாலும் 250க்கும் மேற்பட்ட நிறுவனத் தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆச்சி சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியிருக்கிறார், பத்மசிங் ஐசக். இது ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. ஆரம்பக்கட்ட நிராகரிப்பு, பொருளாதார நெருக்கடி என வழக்கமான தொழில்முனைவு நிறுவனம் எதிர்கொள்ளும் சிக்கல்களை எதிர்கொண்டு, தனக்கென வடிவமைத்துக்கொண்ட பாணியினாலும் யுக்தியினாலும் அவற்றையெல்லாம் கடந்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் சமையல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இன்று உருமாறி நிற்கிறது ஆச்சி நிறுவனம்.

 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் எனும் ஊரில் எளிமையான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பத்மசிங் ஐசக். குடும்பத்தில் மொத்தம் 6 குழந்தைகள். பத்மசிங் ஐசக்கிற்கு இளம்வயதாக இருக்கும்போதே அவரது தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். பள்ளிக்கல்வியை சொந்த ஊரிலேயே நிறைவு செய்த பத்மசிங் ஐசக், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் படிக்கிறார். மேற்படிப்பு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தினால் கோத்ரேஜ் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிக்குச் சேர்கிறார். அங்கு, படிப்படியான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுடன் 10 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். ஒருகட்டத்தில், இந்த நிறுவனத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல தனக்கு வழியில்லை என்பது பத்மசிங் ஐசக்கிற்குப் புரியவருகிறது. அந்த நொடியே வேலையைவிட முடிவெடுத்த பத்மசிங் ஐசக், ஆச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி சொந்தத்தொழிலில் கால் பதித்தார்.

 

"எனக்கு இளம்வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்ட காரணத்தால் அம்மாதான் தனியாளாக நின்று எங்களை வளர்த்து ஆளாக்கினார். அம்மாவின் சமையல் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் சமையல் செய்வதை அருகிலிருந்தே பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சமைப்பதற்கு முன்பு மசால் பொருட்களை அம்மியில் வைத்து அரைப்பார். அடிப்படையிலேயே என் அம்மா மிகவும் சிவப்பாக இருப்பார். அவர் அம்மியில் அரைத்து முடித்த பிறகு அவர் உள்ளங்கையைப் பார்த்தால் ரத்த நிறத்தில் செஞ்சிவப்பாக இருக்கும். இது சிறு வயதிலேயே என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின்னாட்களில் பெண்களின் சமையலை எளிமைப்படுத்தும் விதமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்".

 

நம் அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் சொந்தமாகத் தொழில்தொடங்க வேண்டும் என்று யோசித்திருப்போம். ஏதேனும் ஒரு தொழிலதிபரின் வசதியான வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது அந்த யோசனை ஆசையாக வெளிப்பட்டிருக்கும்; நம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான மெல்லிய கோட்டளவிலான வேறுபாட்டின் உண்மை முகத்தைக் காண நேரும்போது அந்த யோசனை எண்ணமாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஆசைக்கோ, எண்ணத்திற்கோ செயல்வடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. பெயர் சூட்டல், நிதி மூலதனத்திரட்டல், நிர்வாகக் கட்டமைப்பு, குறுகிய மற்றும் தொலைதூர இலக்குத் திட்டமிடல், அதனை நோக்கி நகருவதற்கான செயல்முறை எனக் கடப்பதற்குச் சவால்கள் நிறைந்த உலகம், தொழில்முனைவு உலகம். பல தொழில்முனைவு கனவுகளின் கருக்கள், பெயர் சூட்டலில் செய்த தவறினால் ஆரம்பக்கட்டத்திலேயே கலைந்துவிடுகின்றன. பெயர் சூட்டல் என்ற ஆரம்பக்கட்டச் சவாலை நுட்பமாகக் கடந்த தொழில்முனைவு கனவுகளின் கருக்களே, பின்னாட்களில் உலக இயல்பினாலும், மக்களின் வழக்கமான நடைமுறையினாலும் வார்த்தெடுக்கப்பட்டு, மிகப்பெரும் சாம்ராஜ்யமாக வடிவம் கொள்கின்றன. 

 

ஆச்சி என்ற பெயரைத் தன்னுடைய நிறுவனத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து ஒரு பேட்டியில் கூறிய பத்மசிங் ஐசக், "எங்கள் பகுதியில் அம்மாவின் அம்மாவை ஆச்சி என்றுதான் அழைப்போம். ஆச்சி என்ற சொல் ஆட்சி என்பதிலிருந்துதான் வந்தது என்பார்கள். சமையல் முதல் அனைத்திலும் வீட்டை ஆட்சி செய்யக்கூடியவர் என்ற பொருளில்தான் அவர்களை ஆச்சி என்றழைக்கிறோம். அதனால்தான் எங்கள் நிறுவனத்திற்கு ஆச்சி எனப் பெயர் சூட்டினோம். அதைத் தவிர்த்து சாப்டாச்சி, வந்தாச்சி, போயாச்சி உட்பட ஆச்சி என்று முடியும் பல வார்த்தைகளை நாம் அதிகம் பயன்படுத்துவோம். ஆகையால், மக்களை எளிதில் சென்றைடையவும், மக்கள் அடிக்கடி உச்சரிக்கும்படியான பெயராக இருக்கவேண்டுமெனவும் முடிவெடுத்து ஆச்சி எனப் பெயர் சூட்டினோம்" என்றார். இதுதான் மேலே கூறிய உலக இயல்பினாலும், மக்களின் வழக்கமான நடைமுறையினாலும் வார்த்தெடுக்கப்படுதல் ஆகும்.

 

பெரிய அளவில் முதலீடு இல்லாமல் புதிய தொழில் தொடங்குபவர்கள், வாய்வழி விளம்பரம் மூலமாகவே நிறைய மக்களைச் சென்றடைய வேண்டுமென நினைப்பார்கள். ஆங்கிலத்தில் இதனை WORD OF MOUTH என்பார்கள். அதாவது, ஒரு பொருளின் சிறப்புத்தன்மையைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் கூறுவது. ஆனால், பத்மசிங் ஐசக்கோ தன்னுடைய நிறுவனத்தின் பெயர் சூட்டலில் எடுத்த சமயோஜித புத்திசாலித்தனமான முடிவால் ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்தாதவர்களும் ஆச்சி நிறுவனத்திற்காகத் தன்னையே அறியாமல் வாய்வழி விளம்பரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

நிராகரிப்புகளும் தோல்விகளும் பயணப்பாதையில் மாற்றம் செய்வதற்கான திசைகாட்டிகளேயொழிய தடைக்கற்கள் அல்ல. பத்மசிங் ஐசக்கிடம் இருந்து இந்தப்படிப்பினையையும் நாம் கற்றுக்கொள்ளலாம். அவர் சந்தித்த நிராகரிப்பு குறித்து ஒருமுறை அவர் கூறுகையில், ஆரம்பத்தில் என்னுடைய தயாரிப்பு பொருட்களை எந்தக் கடைக்காரரும் வாங்கவில்லை. "அண்ணாச்சி... குறைவான அளவில் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறியும் அவர்கள் வாங்கத் தயாராக இல்லை. உடனே, கோவில் திருவிழாக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைபோட்டு எங்கள் தயாரிப்பு பொருட்கள் வாங்கினால் டம்ளர் இலவசம் என விளம்பரம் செய்து விற்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒர் ஆண்டிற்கு இந்த வியாபார யுக்தியைத்தான் பின்பற்றினேன். எங்கள் தயாரிப்பின் சுவை பிடித்துப்போன மக்கள், அதன்பிறகு கடைகளில் எங்கள் பொருட்களைத் தேட ஆரம்பித்தனர்" என்றார். சம யோஜித முடிவுகள், வித்தியாசமான நகர்வுகள் மற்றும் புதுமையான செயல்கள் வெற்றி வேரினை எந்த அளவிற்கு ஆழமாகப் பதிக்கும் என்பதற்கு பத்மசிங் ஐசக்கின் வாழ்க்கை ஆகச்சிறந்த உதாரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

"என்னை விரக்தியிலிருந்து மீட்ட அந்த வாசகம்..." ராகுல் டிராவிட்டின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #36
 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.