ADVERTISEMENT

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 9

01:31 AM Aug 06, 2019 | santhoshb@nakk…

ஊழல் ஒப்பந்தங்கள் (உத்தரப்பிரதேசம்)- ILLEGAL CONTRACTS (UTTAR PRADESH)

ADVERTISEMENT

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி அமைச்சரவையின் மூன்று அமைச்சர்களின் செயலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டனர். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், சுரங்கத்துறை இணை அமைச்சர் அர்ச்சனா பாண்டே, கல்வித்துறை இணை அமைச்சர் சந்தீப் சிங் ஆகியோர் ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நபருக்கு ஒதுக்கிய வகையிலும், பணியிட மாற்றங்களுக்காகவும் லஞ்சம் பெற்றதாக வந்த புகார்களில் இந்த செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணல் கொள்ளை ஊழல் (மத்தியப்பிரதேசம்)- ILLEGAL SAND MINING SCAM (MADHYA PRADESH)


மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தின் ஆதரவில் மணல் கொள்ளை கொடிகட்டிப் பறந்தது. அனைவருமே முதல்வர் சவுகானின் உறவினர்களாக இருந்தார்கள். 2017 ஆம் ஆண்டு நர்மதை ஆற்றில் இனி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது தடை செய்யப்படுவதாக முதல்வர் சவுகான் அறிவித்தார். ஆனால், மணல்கொள்ளை தொடர்ந்தது. சுரங்கத்துறை அதிகாரி ஒருவர் மணல்கொள்ளையரை பிடித்தார். அப்போதுதான் தெரிந்தது முதல்வர் சவுகானின் தம்பியின் மகன் தலைமையில் தான் அந்த கொள்ளை நடைபெறுகிறது என்பது.

கட்டமைப்பு குத்தகை ஊழல் மற்றும் நிதி மோசடி!- IL&FS SCAM.

அரசுப் பணத்தை கொள்ளையடித்த இன்னொரு நிறுவனத்தின் ஊழல் இது. ஐஎஃப்&எஃப்எஸ் என்ற நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் 91 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தது. தனது கடனை தொடர்ச்சியாக கட்டத் தவறியதால் இந்திய பொருளாதாரத்தின் மீதே மோசமான விளைவை ஏற்படுத்தியது. இந்தக் கம்பெனியின் லாபம் 900சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடனோ 44 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து கடன்களை திரும்பச் செலுத்த வழியே இல்லை. கம்பெனியின் பங்குகளின் மதிப்பு ஒன்றுக்கும் உதவாது என்றும், கடனை ஈடுகட்ட முடியாது என்றும் கூறப்படுகிறது. எல்ஐசி, எஸ்பிஐ, சென்ட்ரல் பேங்க் ஆகியவை மட்டும் இந்த நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் நிலைமையை மேற்படி நிறுவனங்கள் எப்படி அறியாமல் போயின? இதற்கிடையில், மேற்படி நிறுவனத்தை கடன் நெருக்கடியிலிருந்து மீட்க உதவும்படி எல்ஐசி, எஸ்பிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மோடியின் பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் அழுத்தம் கொடுப்பதாக வெளியான தகவல் தீயாய் பரவியது. இந்த கம்பெனியின் 35 சதவீத பங்குகள் வெளிநாட்டவரிடம் இருக்கின்றன. ஜப்பான், அபுதாபி ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரின் பங்கு மிக அதிகம். இந்த நிறுவனத்தை காப்பாற்றுவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை காப்பாற்ற மோடி முயற்சிக்கிறார் என்று கூறப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணத்தை செலவழித்து இந்த தனியார் நிறுவனத்தை காப்பாற்ற மோடி ஏன் முயற்சிக்கிறார் என்பதே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியது.


வங்கி மோசடி ஊழல் (சத்தீஷ்கர்)- INDIRA PRIYADARSHINI MAHILA SAHAKARI BANK SCAM (CHHATTISGARH)


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள இந்திரா பிரியதர்ஷனி பேங்க்கில் மாநில முதல்வர் ரூ 54 கோடி அளவுக்கு மோசடி செய்த விவகாரம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வங்கியின் மேனேஜராக இருந்தவர்தான் முதல்வர் ராமன்சிங். எனவேதான் இந்த வங்கி அதிகாரிகள் முதல்வருக்கும், அவருடைய அமைச்சர்களுக்கும் ஏராளமாக பண உதவி செய்ய முன்வந்தனர். இந்த மோசடியை சி.டி. ஆதாரத்துடன் காங்கிரஸ் தலைவரின் மகன் அம்பலப்படுத்தினார்.


இண்டிகோல்டு நில பேர ஊழல் (குஜராத்)- INDIGOLD REFINERY SCAM (GUJARAT)

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இண்டிகோல்டு ரீபைனரி என்ற நிறுவனம் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்புள்ள நிலத்தை விற்க அனுமதி கொடுக்கப்பட்டது. தொழிற்சாலை நிறுவ ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை இன்னொரு வணிக நிறுவனத்திற்கு விற்க அனுமதி கொடுத்தது மிகப்பெரிய மோசடி ஆகும். மோடி முதல்வராக இருந்தபோது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல், அரசு விதிகளை திருத்தி இந்த அனுமதியைக் கொடுத்தார். 2014ல் இந்த அனுமதியை உச்சநீதிமன்றமே நிறுத்திவைத்தது. அப்போது ஆனந்திபென் படேல் குஜராத் முதல்வராக இருந்தார்.

கோவா திரைப்பட விழா மெகா மோசடி ஊழல்!- IFFI MEGA SCAM (GOA)

கோவா மாநிலத்தில் சர்வதேச திரைப்பட விழா நடத்திய சமயத்தில் இந்த விழாவை வைத்து மாநில வருவாயில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. 2014ல் நடைபெற்ற இந்த விழாவுக்கான சில வேலைகளை அரசு டெண்டர் விட்டதில் 5 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக பொதுக்கணக்குத்துறை தெரிவித்தது. இந்த விழாவை நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்த ஒரு அமைப்பு தனியாக அலங்கார வேலைகளுக்காக 61 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவழித்தது. இந்த விழாவுக்காக 40 லட்சம் செலவில் 11 ஆயிரத்து 500 விலையுயர்ந்த பேக்குகள் வாங்கப்பட்டு, அதில் 8 ஆயிரத்து 400 பிரதிநிதிகளுக்கு மட்டுமே பேக்குகள் வழங்கப்பட்டது என்றும் பொதுக்கணக்குத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.








ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT