16 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் ப்ளேஆஃப் மற்றும் குவாலிஃபயர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தோல்யுற்ற குஜராத் அணி எலிமினேட்டர் 1ல் லக்னோ அணியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியை சந்திக்கும். இறுதிப் போட்டி வரும் 28 ஆம் தேதி ஞாயிறன்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சென்னை கேப்டன் தோனி அங்கு மைதானம் சீரமைக்கும் பணியாளர்களைச் சந்தித்து உரையாடினார். இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தோனி அந்த பரிசுகளை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களுக்கு விளையாடச் செல்லும் போதும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுடன் தோனி கலந்துரையாடுவது வழக்கம். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் தோனி கலந்துரையாடியுள்ளார். மேலும் அவர்களுக்கு கையொப்பம் இட்டு அவர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதனை சென்னை அணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.