மகளிருக்கான பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது, இந்தத் தொடரில் நேற்று (17.11.2021) நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 175 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் 81 ரன்களைக் குவித்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, விரைவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார்.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் 114 ரன்களைக் குவித்தாலும், மந்தனாவின் சதம் வெற்றிக்கு உதவவில்லை. சிட்னி தண்டர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், மகளிர் பிக்பாஷ் போட்டியில் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அதேபோல் மந்தனா அடித்த 114 ரன்கள், மகளிர் பிக்பாஷில் ஒரு வீராங்கனை ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். ஆஷ்லே கார்ட்னர் என்ற வீராங்கனையும் 114 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.