உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு முறையும் அந்த விமர்சனங்களைக் கடந்தே அந்த அணி முன்னேறி வருகிறது.
துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட், டி20 தொடர்களிலும் அந்த அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் முதல் போட்டி ட்ராவில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேபோல், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் துபாயில் மோதவுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக். உலகளாவிய அளவில் தனக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். இவர் கடைசி டி20 போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும், உலக டி20 வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்தார்.
இதையடுத்து, தனது அணியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், அணித்தலைமை, காம்பினேஷன், உடல்தகுதி, சுழற்சி முறைக் கொள்கை என பலவற்றிலும் எங்களை நோக்கி கேள்வியெழுப்பும் மீடியா/மக்களுக்கு.. எனக்கூறி இதுவரை பெற்ற வெற்றிகளைப் பட்டியலிட்டதோடு, அணியில் உள்ள ஒவ்வொரு நபரை எண்ணியும் நான் பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.