ADVERTISEMENT

"இதை பிசிசிஐ-யிடம் விட்டுவிடுங்கள்" - விராட் கோலி விவகாரத்தில் முதல்முறையாக பேசிய கங்குலி!

09:57 AM Dec 17, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது குறித்து பதிலளித்த கங்குலி, "இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட்டை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

மேலும் கங்குலி, "ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தனித் தனி கேப்டன்கள் இருப்பது சரியானதல்ல என தேர்வாளர்கள் நினைத்தார்கள். எனவே, விராட் டெஸ்ட் கேப்டனாக தொடர்வார் என்றும் ரோகித் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு குறித்து (பிசிசிஐயின்) தலைவர் என்ற முறையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன், தேர்வுக்குழு தலைவரும் அவருடன் பேசியுள்ளார்" எனக் கூறினார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விலக வேண்டாம் என யாரும் கூறவில்லை என தெரிவித்தார். மேலும், "டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் என்னை தொடர்புகொண்டனர். தலைமை தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணி குறித்து விவாதித்தார். அழைப்பு முடிவடைவதற்கு முன்பு, நான் இனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என ஐந்து தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கு முன்பாக இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகும் முன்னர் பிசிசிஐயிடம் அதுகுறித்து தெரிவித்தேன். எனது கருத்தை அவர்களிடம் சொன்னேன். அதைப் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி அதனைப் பிசிசிஐ வரவேற்றது" என்றார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது தொடர்பாக, கங்குலி கூறியவற்றிலிருந்து முரண்பட்ட ஒன்றை விராட் கோலி கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்களும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என குரலெழுப்பினர். அதேநேரத்தில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து சர்ச்சைக்கு விளக்கம் அளிப்பார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் கங்குலி, விராட் கோலி விவகாரத்தில் "அறிக்கை வெளியிடப்படாது. செய்தியாளர் சந்திப்பு நடைபெறாது. நாங்கள் இதைக் கையாள்வோம். இதைப் பிசிசிஐயிடம் விட்டுவிடுங்கள்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT