இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 தொடரில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியைப் பதிவுசெய்ய முடியவில்லை. அதேபோல், டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு அத்தனை சுவாரஸ்யத்தைத் தந்துவிடவில்லை. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது, பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுத்தந்தன.
இந்நிலையில், தொடரில் நீடிப்பதற்கு முக்கியத்துவம்வாய்ந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சில மாற்றங்களுடன் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. தொடக்கவீரர்கள் இடத்தில் தவான் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. தினேஷ் கார்த்திற்குப் பதிலாக இளம்வீரர் ரிஷப் பாண்ட் களமிறங்கவுள்ளார். அதேபோல், கையில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் இடத்தில் களமிறங்கவுள்ளார். இந்த மாற்றங்கள் மிகமுக்கியமான கட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, பழைய நிலைக்கு அணி திரும்பவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.