இலங்கையில் நடைபெற்று வரும் நிதஹாஸ் முத்தரப்பு டி20 கோப்பைக்கான தொடரின் நான்காவது ஆட்டம் நேற்று பிரேமதாஸா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குஷல் மெண்டிஸ் 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடி வெற்றி இலக்கை எட்ட வழிவகுத்தனர். இந்திய அணியின் சார்பில் மணீஷ் பாண்டே அதிகபட்சமாக 42 (31) ரன்கள் எடுத்திருந்தார். நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரதுல் தாகூட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், ஜீவன் மெண்டிஸ் வீசிய பந்தைத் தடுத்தாடும்போது, ஸ்டம்புகளை மிதித்து ஹிட் விக்கெட் ஆனார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் லாலா அமர்நாத் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நயன் மோங்கியாவும் ஹிட் விக்கெட் ஆனவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.