இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வுப்பட்டியலில் கோலியின் பெயரும் இடம்பெற்றிருந்தாலும் தோனியின் மீதான நீக்கம் அவரை அணியில் இருந்து ஓரம்கட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
தோனியை அணியில் இருந்து நீக்கியது தொடர்பாக அவரது ரசிகர்கள் கொந்தளித்த நிலையில், பிசிசிஐ அணித் தேர்வாளர்கள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் இதுகுறித்து விளக்கமளித்தார். அவர், தோனியை அணியில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அவரை அணியில் இருந்து நீக்கவும் இல்லை. இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கான சோதனை முயற்சியே இந்த நடவடிக்கை எனக் கூறினார்.
இந்நிலையில், புனேவில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், விக்கெட் கீப்பர் தோனி பிடித்த கேட்ச் ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. போட்டியின் ஆறாவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீச, ஹேம்ராஜ் சந்தெர்பால் எதிர்கொண்டார். பவுன்சரான பந்தை சிக்சருக்கு அனுப்ப நினைத்தவர், எட்ஜாக்கியதால் ஃபைன் லெக் திசையில் பந்து வேகமாக சென்றது. பந்தை விடாமல் விரட்டி ஓடிய தோனி, மிகவும் கடினமான அந்த கேட்சை பறந்தபடி பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்ளோ ஃபிட்டாக இருப்பவருக்கா ஓய்வு தர்றீங்க என ரசிகர்கள் அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.