ADVERTISEMENT

தடுமாறும் வங்கதேசம்; அஸ்வின், குல்தீப் இறுதிநேர ஆட்டத்தில் தப்பித்த இந்தியா

01:25 PM Dec 15, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்து வந்த விராட் கோலியும் 1 ரன் எடுத்து வெளியேறினார். இதன் பின் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். புஜாரா மெதுவாக ஆட ரிஷப்பண்ட் அதிரடியாக ஆடி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர், புஜாரா ஜோடி மெதுவாக ஆடி ரன்களைச் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 261 ஆக இருந்தபோது புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த அக்ஸர் படேல் முதல் நாளின் இறுதிப்பந்தில் 14 ரன்களில் வெளியேற, முதல் நாள் முடிவில் இந்திய அணி 278 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வங்கதேச அணியில் டைஜுல் 3 விக்கெட்களையும் ஹாசன் மிராஸ் 2 விக்கெட்களையும் கலீத் அஹமத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்நிலையில், இன்று துவங்கிய இரண்டாம் நாளில் ஆட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே ஸ்ரேயாஸ் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின் அஸ்வின், குல்தீப் யாதவ் ஜோடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. அஸ்வின் 58 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து குல்தீப் யாதவ் 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்களை இந்திய அணி குவித்தது.

இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி தன்னுடைய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாண்டோ இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் வந்த யாசிர் அலியும் 4 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆக வங்கதேச அணி 60 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. சிராஜ் மூன்று விக்கெட்களையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT