2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற 13 ஒருநாள் போட்டிகளில் 3 முறை 350+, 5 முறை 300+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் 350+ ரன்கள் எடுத்துள்ளனர்.
டி20 போட்டிகளில் 200+ ரன்கள் எடுப்பது சுலபமாக மாறியுள்ள நிலையில் 50 ஓவர் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் போது ஒரு இன்னிங்ஸிலேயே 500+ ரன்கள் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் அளித்த பேட்டியில் 500 என்று போடப்பட்ட ஸ்கோர் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை 60 முறை 150+ ரன்களை ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் எடுத்துள்ளனர். அதில் ஒரு முறை மட்டுமே 200 ரன்கள் எடுக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 64 முறை ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் 150+ ரன்கள் எடுத்துள்ளனர். 7 முறை 200+ ரன்கள் அடித்துள்ளனர்.
முதன்முறையாக 1987-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 350+ ரன்கள் எடுத்தது. ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 150+ ரன்களை நியூசிலாந்து வீரர் டர்னர் 1975-ஆம் ஆண்டு எடுத்துள்ளார். டர்னர் அந்த போட்டியில் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 171* ரன்கள் எடுத்தார்.
உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 2010-ஆம் ஆண்டு வரை 300+ ரன்கள் 34 முறையும், 350+ ரன்கள் 3 முறையும் அடிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 300+ ரன்கள் 48 முறையும், 350+ ரன்கள் 13 முறையும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது விதிமுறைகள், பவர் ப்ளே, பிட்ச் என பெரும்பாலும் பேட்டிங்குக்கு சாதகமாகவே மாற்றப்பட்டுள்ள காரணத்தால் அதிக ரன்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் 1999-ல் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது இருந்த மைதானங்களின் தன்மையும், இப்போதைய இங்கிலாந்து மைதானங்களின் தன்மையும் பல மாற்றங்களை சந்தித்துள்ளது.
முன்புபோல இங்கிலாந்து மைதானங்கள் இப்போது இல்லை. தற்போது பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. சமீபத்தில் இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போதே 300 ரன்கள் எளிதாக அடிக்கப்பட்டது என்று இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் தெரிவித்திருந்தார்.