ADVERTISEMENT

பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5

06:43 PM Jul 04, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

பருத்தி உடைக்கு சொந்தக்காரர்கள் இந்தியர்கள். கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியிலிருந்து நூல் நூற்க கற்றுக் கொண்டார்கள். பருத்தியை விவசாயம் செய்து பெருமளவு உற்பத்தி செய்யத் தொடங்கினர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் லேசான துணி பருத்தித் துணிதான்.

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த திராவிடர்கள் பருத்தி ஆடை தயாரிப்பில் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட முத்திரைகளில் உடைகள் அணிந்த உருவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


ஹரப்பா நாகரிகத்தில் உடைகள் அணியாத உருவங்கள்தான் இருந்தன. சிந்துசமவெளி நாகரிகத்தில் இடுப்பில் வேஷ்டி அணிந்த ஆண்களும், முழங்கால்வரை உடை அணிந்த பெண்களும் இருந்தனர். மார்புப்பகுதியை இரு தரப்பினரும் மூடவில்லை. பருத்தி, சணல், கம்பளி, லினன், தோல் ஆகியவற்றை பயன்படுத்தி உடைகள் தயாரிக்கப்பட்டன. உடைகளுக்கு வண்ணச்சாயம் பூசியதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆணும் பெண்ணும் கழுத்து, கைகள், காது, கணுக்கால், விரல்களுக்கு நகைகள் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த நகைகள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன. பளபளா கற்களையும் நகைகளில் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் கூந்தலை விதவிதமாக பின்னலிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆண்கள் தாடியை டிரிம் செய்திருந்தனர்.




வேத காலத்தில் அதாவது கி.மு.1500 முதல் கி.மு.500 வரையிலான காலத்தில் பருத்தியால் நெய்யப்பட்ட வேஷ்டி போன்ற நீளமான செவ்வக துணியை பருத்தியிலிருந்து உருவாக்கினர். ஆணும் பெண்ணும் நீளமான ஒரே துணியை உடல்முழுவதும் சுற்றும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்தியர்களுக்கு முன்பே தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலும், எகிப்திலும் பருத்தியின் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.மெக்ஸிகோவின் குகை ஒன்றில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருத்திஆடையின் மிச்சங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், இந்தியர்கள்தான் பருத்தியை திறமையாக பயன்படுத்தினர். ரிக்வேதத்திலேயே பருத்தி ஆடை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த வரலாற்றாளர்ஹெரடோடஸ். இவர் இந்திய பருத்தி பற்றி தனது நூலில்...

“இந்தியாவில், செம்மறி ஆடுகளில் கிடைப்பதைக் காட்டிலும் தரமான கம்பளி கிடைக்கிறது. காடுகளில் வளரும் இந்த மரக் கம்பளிகளில் இருந்து பெறும்இழைகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தரமான ஆடைகளை தயாரிக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.

ஹெரடோடஸ் இப்படி எழுதியதற்கு, கம்பளியைத் தவிர கிரேக்கர்கள் வேறுஇழைகள் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். அப்போது மட்டுமல்ல கி.மு. 1350 ஆம் ஆண்டுவரை கூட அவர்கள் பருத்திச்செடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பருத்தி ஆடைகள் கிரேக்கத்திற்குஇறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும், பருத்தி மரம் சிறு சிறு செம்மறிஆடுகளுடன் இருப்பதாகவே மாண்டேவில் என்பவர் எழுதியிருக்கிறார்.

“கிளை நுனியில் இருக்கும் சிறு சிறு செம்மறி ஆடுகளுக்கு பசி எடுக்கும்போது, கிளைகள் வளைந்து அவற்றை தரையில் மேயவிட்டதாக” அவர் எழுதியிருக்கிறார்.

வேதகாலத்தில், பரிதானா என்ற இடுப்பு இடுப்புக்கு கீழான உடையையும், மேல் துண்டு ஒன்றையும் மக்கள் பயன்படுத்தினார்கள். மேல் துண்டை கோடைக் காலத்தில் அணியமாட்டார்கள். ஆனால், கீழ்சாதியினர் எனப்பட்டவர்கள் கோவணம் மட்டுமே அணிய அனுமதி இருந்தது. உடைகள் சமூக அந்தஸ்த்தை குறிப்பனவாக கருதப்பட்டன.

கி.மு.322 முதல் 185 வரையிலான மவுரியர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான உடைகளின் மாதிரி யக்‌ஷி என்ற சிலை வடிவங்களில் இருந்து கிடைக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இடுப்புக்கு கீழான உடைகளையே அணிந்திருந்தனர். இடுப்பில் ஒரு கயிறால் கட்டும் வகையில் அந்த உடைகள் இருந்தன. அதாவது பாவாடை மாதிரியாக இருந்தன. மேலுடையாக நீளமான துண்டை பயன்படுத்தினார்கள். அந்த மேலாடை ஒருபக்க தோள்பட்டை வழியாகவோ, இருபக்க தோள்பட்டைகள் வழியாகவோ அணிந்திருப்பார்கள். நகைகளையும் வித்தியாசமான வடிவங்களில் செய்து பயன்படுத்தினார்கள்.


கி.பி.320 முதல் 550 ஆண்டுகளுக்கு இடையிலான குப்தர்கள் காலத்தில் தைக்கப்பட்ட உடைகள் புழக்கத்திற்கு வந்தன. சமூக அந்தஸ்த்துக்கு அடையாளமாக இந்த உடைகள் இருந்தன. அதேசமயம், தைக்காத உடைகளை பயன்படுத்தும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.

பெண்கள் ஒரே துணியை பல அடுக்குகளாக மடித்து இடுப்பில் கட்டி, ஒரு முனையை தோள்பட்டையில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. நடனமாதுகள் வித்தியாசமான உடையை அணிந்தார்கள். மன்னர்கள் இடுப்பில் மட்டுமே உடை அணிந்தனர். மார்புகளில் அகன்ற நகைகளையும், கைகளிலும் கால்களிலும் காப்புகளையும் அணிந்தனர். ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து, அவற்றை வளையங்களை பயன்படுத்தி சுருள் சுருளாக்கினர். பெண்களும் தங்கள் கூந்தலை பூக்கள் மற்றும் அழகிய வளையங்களால் அலங்கரித்தனர்.

இந்தியர்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நூற்பு சக்கரத்தை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து ஆடை நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ரோமப் பேரரசு வரை பருத்தி ஆடை வர்த்தகம் நடைபெற்றது.முகலாயர்கள் காலத்தில்தான் ஆடம்பரமான உடைகள் அறிமுகமாகின. மஸ்லின் என்ற மெல்லிய துணிகளும், பட்டு, வெல்வெட், ப்ரொகேட்ஸ் ஆகிய வழுவழுப்பான துணிகளும் பயன்பாட்டுக்கு வந்தன.



முகலாயர்களில் ஆண்களும் பெண்களும் பின்னல் வேலைகளுடனும், முத்துக்களை கோர்த்தும் உடைகளை அவர்கள் அணிந்தனர். அதேசமயம், சாதாரண மக்கள் வழக்கம்போல சாதாரண ஆடைகளை அணிந்தனர். கிராமப்புற மிகச்சிறதளவே துணிகளை பயன்படுத்தினர். ஒரே துணியை பயன்படுத்துகிறவர்களும், கோவணம் அணிந்தவர்களும் பெரும்பான்மையாக இருந்தனர்.



கி.பி.7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் ரஜபுத்திரர்கள் என்ற புதிய சத்திரிய சமூகம் உருவானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய பாரம்பரியமான நடைமுறையைக் கடைப்பிடித்தனர். ஆளும் வர்க்கத்தினர் நீண்ட மேலங்கியும், பைஜாமா மாதிரியான உள்ளாடையும் அணிந்தனர். தலையில் அலங்காரத் தலைப்பாகையும், விதவிதமான நகைகளையும் அணிந்தனர். ஷெர்வானி போன்ற உடையும் அப்போது புழக்கத்தில் இருந்தது. வேட்டியை பெரும்பகுதியினர் உடுத்தினர். பாலைவனப் பகுதியில் தேவதா ஸ்டைலிலும், மற்ற பகுதிகளில் டிலாங்கி ஸ்டைலிலும் உடுத்தினார்கள்.

பெண்கள் ரஜபுத்திரர்கள் காலத்து ஓவியங்களை பார்க்கும்போது மெல்லிய உடைகளை மிகவும் லாவகமாக உடலைச்ச சுற்றி அணிந்திருப்பதை பார்க்கலாம். பாவாடை சட்டையை அணிந்து மேலே ஒரு துணியை போர்த்தும் பழக்கம் இருந்தது. தலையையும் முகத்தையும் மறைக்கும் வகையில் மெல்லிய துணியை போர்த்தியிருந்தனர். மிக வித்தியாசமான முகத்தையே மறைக்கும் அளவுக்கான நகைகளை பயன்படுத்தினார்கள்.


கி.பி.15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பருத்தி ஆடை ரகசியத்தை தங்கள்நாடுகளுக்கு கொண்டு சென்றனர். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்த பிறகு,இங்கிருந்து குறைந்த விலையில் பருத்தியை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்குஏற்றுமதி செய்தனர்.

17ஆம் நூற்றாண்டின் இறுதியில், நூற்பு எந்திரங்களும் நெசவு எந்திரங்களும்அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் தொழில்புரட்சிதொடங்கியது. இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கிதரமான பருத்தி ஆடைகளை இந்தியாவுக்கே கொண்டு வந்து அதிக விலைக்குவிற்றனர். இந்தியாவின் பருத்தி ஆடை உற்பத்தி நலிவடைந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய பருத்தியை பிரிட்டிஷார் புறக்கணித்தனர். அமெரிக்ககுடியேற்ற நாடுகளில் கூலியில்லாமல் வேலை செய்த கருப்பர்களால் தரமானபருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. அந்த பருத்தியை பிரிட்டிஷாரும்ஐரோப்பியர்களும் வாங்கத் தொடங்கினர். மொத்தத்தில் இந்தியாவின் பருத்திஉற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆடை உற்பத்திக்கு தொடக்க காலத்தில் மூன்றுவகையான இழைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

பிரிட்டிஷார் வரவுக்குப் பிறகு இந்தியர்கள் உடை அணியும் பழக்கமும் மாறத்தொடங்கியது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு முற்றிலும் பொருந்தாத கோட், சூட் அணிவதில் மேல்தட்டு மக்கள் ஆர்வமாக இருந்தனர்.


துணி உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. நவீன கல்வி அறிவு இந்திய மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. கண்டுகொள்ளப்படாமல் கிடந்த கிராமங்களும் வெளியுலகப் பார்வைக்கு வந்தன. ராஜாக்கள், ஜமீன்தார்கள் காலம் போய் நவீன ஆட்சிமுறை, மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உடை என்பது மனிதர்களின் வசதிக்கானது என்ற சிந்தனை வளரத்தொடங்கியது. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் உடைகள் விற்பனையை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளை வடிவமைத்தனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களும் மக்களுடைய உடைத்தேர்வுக்கு புதிய வழிகாட்டியாக மாறத்தொடங்கின.

இந்தியாவில் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசத்திலும் வளர்ச்சியடைந்த நாகரிகத்திற்கு தகுந்தபடி உடை வடிவமைப்புகள் இருந்தன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான உடைகள் அணியப்படவில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முன்னரே புராதன மேற்கத்திய உலகத்தில் எகிப்து, மெசபடோமியா, பெர்சியா, கிரெட்டே, கிரீஸ், ரோம் ஆகிய பகுதிகளில்வளர்ச்சியடைந்த நாகரிகம் உருவெடுத்திருந்தது. இந்த பகுதிகல் அனைத்தும்மத்திய தரைகடல் பகுதியை சுற்றியிருந்தன.

(இன்னும் வரும்)

அடுத்த பகுதி:

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6

முந்தைய பகுதி:

சீனப் பட்டும், சில்க் ரோடும்!!! உடையின் கதை #4



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT