Skip to main content

எரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36

Published on 24/04/2019 | Edited on 07/05/2019

உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் யாவும் மொழிக்கு உயிர்போன்ற சொற்கள். அவற்றில் பல சொற்கள் ஓரெழுத்து ஈரெழுத்துச் சொற்களாகவே தோன்றி நிற்கும். ஒரு சொல்லானது ஒன்றோ இரண்டோ எழுத்துகளால் ஆகி வழங்குகிறது என்றால் அச்சொல் நூற்றுக்கணக்கான பிற சொற்களுக்கு வேர்ச்சொல்லாகும். அவ்வொரு சொல்லின் வழியாக நாம் பல புதுச்சொற்களை உருவாக்கி வழங்கலாம். இத்தொடரில் அத்தகைய ஆணிவேர்ச்சொற்களை உரிய இடைவெளிவிட்டு வழங்கிவிடவேண்டும் என்பதும் என்னவா. 
 

soller uzhavu


எரி என்ற ஈரெழுத்துச் சொல்லை எடுத்துக்கொள்வோம். எ என்னும் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களில் இது இன்றியமையாதது. எரி என்பதற்குத் “தீக்கொழுந்திற்குள் ஒன்றையிடு, தீயினைத் தொடர்ந்து கொழுந்துவிடச் செய்” ஆகிய ஏவற்பொருள்கள் உள்ளன. எரிதல், எரிவு, எரிகை, எரிப்பு எனவும் தொழிற்பெயராகும். எரிந்தான் என்றால் தன்வினையாகும். எரித்தான் என்றால் பிறவினையாகும்.
 

தீயில் எறிந்தது - தீயில் எரிந்தது என்ற தொடர்களை நோக்குங்கள். தீயில் எறிதல் என்றால் தீயில் வீசுதல். தீயில் எரிதல் என்றால் தீக்கொழுந்தினால் தானும் தீப்பற்றி எரிந்து போதல்.
 

எறி என்று வல்லின றகரத்தைப் பயன்படுத்தினால் குண்டெறிதல், வட்டெறிதல், பந்தெறிதல் ஆகிய வீசுவினைகளைக் குறிப்பதாகும். எரி என்று இடையின ரகரத்தைப் பயன்படுத்துவதுதான் தீயோடு தொடர்புடைய எரியும் வினைப்பொருள் தரும். இவ்வேறுபாட்டினை மறந்தவர்கள் “பந்தை எரிந்தான், தீயிலிட்டு எறித்தான்” என்று பிழையாக எழுதுவார்கள்.

 

soller uzhavu


எரி என்பது ‘எரிப்பாயாக’ என்னும் ஏவல் பொருள் தரும் வினைவேர்தான். “குப்பையை எரி, பழைய தாள்களை எரி” என்று கட்டளையிடலாம். எரி என்பது நெருப்பு, தீ என்னும் பொருளில் முதல்நிலைத் தொழிற்பெயரும் ஆகும். அடி, உதை, குத்து, சொல் என்பன ஏவல்பொருள் தரும் வினைவேராக இருந்தபடியே அந்த வினைக்குரிய பெயர்ச்சொல்லும் ஆகின்றனவே, அவ்வாறே எரி என்ற சொல்லும் வினையும் பெயருமாம். ஏவல்வினையே பெயராகவும் பயில்வதைத்தான் முதல்நிலைத் தொழிற்பெயர் என்கிறார்கள்.
 

வேள்வித்தீயினை ‘எரி’ என்றிருக்கிறார்கள். எரியூட்டுவதற்கு, தீத்தள்ளுவதற்கு ஏதேனும் கம்பு, தடி போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டாலும் அதனை ‘எரி’ என்றார்கள். நரகத்திற்குத் தமிழில்  ‘எரி’ என்று பெயர். ஏழுவகை நரகங்களில் ஒன்றுக்கு ‘எரிபரல்வட்டம்’ என்று பெயராம். அங்கே தீத்தழல் அணையாது எரிந்துகொண்டிருக்கும் என்பதால் அப்பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வானிலிருந்து விண்கல்லொன்று புவிக்கோளத்தின் வளி மண்டலத்தில் விழும்போது அது தானாகவே தீப்பிடித்து எரிந்தபடி விழும். அவ்வாறு விழுவனவற்றை எரிநட்சத்திரங்கள், எரிகற்கள் என்கிறோம். சுருக்கமாக எரி என்பதும் உண்டு. வானிலிருந்து எரி விழுந்தது.
 

தீப்பற்றித் தழலாகும் நேரடி வினைக்கு மட்டுமின்றி அத்தகைய உணர்வினைத் தருவனவற்றுக்கும் எரி என்ற சொற்பயன்பாடு கருதப்பட்டது. ஒருவர்மீது கொள்ளும் பொறாமையால் மனங்குமைவதைக் குறிப்பிட “அவன் வயிறு எரிகிறது” என்று குறிப்பிட்டார்கள். பொறாமையால் பொங்குபவனை “உனக்கு ஏனப்பா எரியுது ?” என்று கேட்கிறோம். “வயிறெரிஞ்சு சொல்றேன்… நீ இதுக்கு நல்லா படத்தான் போறே…” என்கிறார்கள். உண்டது செரிக்காமல் இரைப்பைப் புழுக்கத்தை உணர்வதையும் “வயிறு எரியுது” என்று சொல்கிறோம். உடலுக்குள் ஏதேனும் காற்றுப் பிடிப்பு ஏற்பட்டாலும் அதனை “நெஞ்சு எரியறாப்பல இருக்குது…” என்பார்கள்.

 

soller uzhavu



யாரேனும் நமக்குச் சலிப்பையோ அலுப்பையோ தந்துவிட்டால் “ஒரே எரிச்சலா இருக்கு…” என்கிறோம். “முதலாளிக்கு என்னாச்சோ தெரியல… எரிஞ்சு விழறார்…” என்றும் சொல்கிறோம். சினத்தினால் கடுஞ்சொல் கூறுவதை எரிந்து விழுதல் என்று கூறலாம். மிளகாயைத் தின்றால் அது காரச்சுவையை உணர்த்தும். “ஆ… நாக்கு எரியுது… தண்ணீர் கொடுங்க…” என்று கேட்கிறார்கள். காரச்சுவையுணர்ச்சி எரிவதைப்போல் உணரப்படுகிறது.  
 

சில பூச்சிகள், வண்டு வகைகள், செடி கொடிகள் இருக்கின்றன. அவை நம் உடல்மீது பட்டுவிட்டால் பட்ட இடத்தில் தாளாமை ஏற்படும். ”எதுவோ பட்டுருச்சு… தோல் எரிச்சலா இருக்குது…” என்கிறோம். தோலில் தீப்பட்டு எரிவதுபோல் இருப்பதைத்தான் அவ்வாறு கூறுகிறோம். நமைச்சல், குடைச்சல், எரிச்சல் என்று உடல்படும் பாடுகளிலும் எரி வந்துவிடுகிறது. விரியன் பாம்புகளில் எரிவிரியன் என்றே ஒருவகை இருக்கிறதாம். அந்தப் பாம்பு பட்டாலோ தீண்டினாலோ உடலெல்லாம் தீப்பட்டதுபோல் எரியுமாம்.
 

எரி என்பதை முன்னொட்டாகக்கொண்டு எண்ணற்ற வினைத்தொகைகளை உருவாக்கலாம். எரிகாடு, எரிவனம், எரிகரை போன்றவை சுடுகாட்டைக் குறிப்பவை. எரிகதிர் நல்ல வெளிச்சமும் வெப்பமும் தரும் சூரியனைக் குறிக்கிறது. முற்காலத்தில் மாலைப்பொழுதினை எரிபொழுது என்று வழங்கியிருக்கின்றனர். மாலை ஆனதும் இரவுப் பொழுதுக்குத்  தீவத்தியினாலோ அகல்விளக்கினாலோ எரியூட்ட வேண்டும். அதற்குரிய பொழுது என்பதால் மாலைப்பொழுதினை ‘எரிபொழுது’ என்றனர்.    
   

இரண்டெழுத்துகளால் ஆகிய சிறுசொல் ஒன்றினால் மொழிக்கு விளையும் பொருள்நலம் என்ன என்பதற்கு ‘எரி’ என்னும் இச்சொல்லே எடுத்துக்காட்டு. 

 

முந்தைய பகுதி:


தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 35
 

அடுத்த பகுதி:


பெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37
 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.