விநாயகர் சிலையை வாழை அல்லது சிவப்புநிறத் துணியின் மீது வைத்து, விநாயகருக்கு சாந்து அணிவித்து, தூபம் காட்டி, பூ, பழம் வைத்து, ஒரு பூணூல், நான்கு பாக்குகள் வைத்து வழிபட்டால், பண வசதி உண்டாகும். வியாபாரத்தில் கஷ்டம் இருப்பவர்கள், கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் வீட்டில் விநாயகருக்கு ஒன்பது சிவப்புநிற மலர்களை வைத்து, ஒரு முழுத் தேங்காயை வைத்து, தூபம் காட்டி, தீபமேற்றி, பிசாதமாக நான்கு கொய்யாப்பழங்களை வைத்து, மதிய வேளையில் அவரை வழிபட வேண்டும்.
வயிற்றில் நோய் இருப்பவர்கள் விநாயகருக்கு அரிசிப் பாயசம், வாழைப்பழம், வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிபடவேண்டும். பாயசத்தை தானும் சாப்பிட்டு, பிறருக்கும் அளிக்கவேண்டும். திருமணத்தடை இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் புடவை அல்லது மஞ்சள்நிற வேட்டியை வைத்து, பூந்தி, லட்டு, அறுகம்புல், பூ வைத்து தீபமேற்றி வணங்கவேண்டும். இதைச் செய்தால் திருமணத்தடை நீங்கும். வீட்டில் சந்தோஷ சூழல் நிலவ விநாயகருடன் லட்சுமியையும் வைத்து வழிபடவேண்டும். விநாயகருக்கு சந்தனம், எருக்கம்பூ, மைதாவில் செய்த பூந்தி, லட்டு வைத்து, தூபம், தீபமேற்றி மதியம் 12.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும். குடும்பத்திலிருக்கும் எல்லாரும் பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பகவானுக்கு வைத்த பிரசாதத்தை அனைவரும் சாப்பிட்டு பிறருக்கும் தரவேண்டும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் விநாயகரை வழிபட்டு, அரசமரத்திற்குக் கீழே இருக்கும் விநாயகருக்கு பூ, பழம் வைத்து அங்கு ஐந்து தீபங்களை ஏற்றி, தேங்காய் வைத்துப் பூஜை செய்யவேண்டும். வீட்டிலிருப்பவர்கள் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகுதான் மதிய உணவைச் சாப்பிட வேண்டும். இதைச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு வீட்டில் விநாயகருக்கு அறுகம்புல் வைத்து, குழந்தைகளின் புத்தகங்களுக்கு பொட்டுவைத்து, கற்கண்டு, பாதாம்பருப்பு வைத்து தூப தீபமேற்றி வழிபடவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அனைவரும் விநாயகரை வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்.