ஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்கமுடியாது. அவருடைய சொத்து அவருக்குக் கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள். அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்தால், அதிலும் குறிப்பாக 3-ஆம் வீட்டில் சேர்ந்தால், சகோதரர்கள் சொத்துகளை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் 11-ல் உச்சமாக இருந்து, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், ஜாதகர் தன் பேராசை குணத்தால் ஏமாந்துவிடுவார். தனது சொத்து அவருக்குக் கிடைக்காது. 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
4-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் ராகு இருந்தால், வரவேண்டிய குடும்பச் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 8-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால், தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது. 4-க்கு அதிபதி நீசமடைந்து, 8-ல் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது 8-ஆம் அதிபதியுடன் இருந்தால், அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.
செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து வணங்கவேண்டும். செவ்வாயின் "ஓம் அங்க் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
தினமும் அரசமரத்திற்கு நீரூற்றி,சுற்றிவர வேண்டும். சனிக்கிழமைகளில் அரசமரத்திற்கு தீபமேற்றி வைப்பது நல்லது.
தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் வார்ப்பது சிறந்தது.
முன்னோர்களின் கடவுளை வழிபடவேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது. படுக்கையறையில் செருப்பை விடுவது நல்லதல்ல. படுக்கையை காலால் உதைப்பதும் தவறு.
ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவர் சந்நிதிக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், சொத்து விஷயங்களிலிலிருக்கும் தோஷங்களும் பிரச்சினைகளும் நீங்கும். வரவேண்டிய சொத்துகள் நிச்சயம் தேடிவரும்.