பங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரத்திருநாள். 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் நாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும் பன்மடங்கு சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை கல்யாண நோன்பு, கல்யாண விரத நாள் எனவும் புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
கன்னிப் பெண்கள் பங்குனி உத்திர நாளன்று கல்யாண விரதம் கடைப்பிடித்து, அன்று ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
சில கோவில்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அந்தந்த தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும். திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.
பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. அன்று மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமண வைபவத்தை ஆண்டுதோறும் நடத்துவார்கள். முருகன் தெய்வானையை அன்றுதான் திருமணம் புரிந்துகொண் டார். வள்ளியின் அவதார தினமும்,
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான் திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினம்தான்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வதை இன்றும் காணலாம்.
ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர்.
Show comments