ADVERTISEMENT

விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மைகள்; விபூதி பற்றிய சுவாரசிய தகவல்கள்

04:13 PM Feb 13, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவிலில் இறைவனை தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி கொடுத்து ஆசீர்வாதம் செய்வது காலங்காலமாய் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு வழக்கம். கோவில்களில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விபூதியை அணிந்து கொள்பவர்களை தீமைகளிலிருந்து காப்பாற்றும் கவசமாக இருந்து பிரச்சினைகளைப் போக்கி செல்வத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருளுண்டு. விபூதியை நாம் தரித்துக்கொள்ளும்பொழுது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோ அணிந்துகொள்ள வேண்டும். வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால் விபூதியை பவ்யமாக எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் கோவிலுக்குச் செல்லும்பொழுதும், இரவு படுக்கப் போகும் முன்பும் விபூதி போட்டுக் கொள்ளலாம்.

விபூதி பூசும்பொழுது வெள்ளை நிற விபூதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். விபூதியைப் பயன்படுத்தும்பொழுது நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பயன்படுத்தக் கூடாது. ஆசாரியார், சிவனடியார்களிடமிருந்து விபூதி வாங்கும்பொழுது அவர்களை வணங்கி வாங்கவேண்டும். வாயைத் திறந்து கொண்டும், பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.

விபூதி, இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீருமென்பது இன்று வரைக்கும் இருக்கக் கூடிய ஒரு நம்பிக்கை. திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டபொழுது, அவருடைய தமக்கையார் வயிற்றில் விபூதி பூசி குணமடையச் செய்த வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது.

விபூதியை உச்சியில் தரிப்பதன் மூலமாக கண்டத்துக்கு மேல் செய்த பாவம் நீங்குமெனவும், விபூதியை நெற்றியில் தரிக்கும்பொழுது நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்குமெனவும், விபூதியை மார்பில் தரிக்கும்பொழுது மனதினால் செய்த குற்றம் விலகுமெனவும், விபூதியை நாபியில் தரித்தால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்குமெனவும் சொல்லப்படுகிறது.

விபூதியை முழந்தாள்களில் தரித்தால் கால்களால் செய்த பாவம் நீங்குமெனச் சொல்லப்படுகிறது. விபூதியை முதுகின் கீழுள்ள முச்சந்தியில் தரித்தால் சூதத்தினால் செய்த பாவம் விலகுமெனவும், விபூதியை புயங்களில் தரித்தால் அந்நிய மாதரிடம் தவறாக நடந்த பாவம் நீங்குமெனவும், நம்முடைய கையிலுள்ள கட்டை விரலால் விபூதியைத் தொட்டு அணியும்போது தீராத சிலவகை நோயானது நம்மிடம் வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது.

நம்முடைய சுட்டுவிரல் மூலமாக விபூதியை எடுத்துப் பூசும்பொழுது பொருட்கள் நாசம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறது. நம்முடைய நடுவிரல் கொண்டு விபூதி எடுத்துப் பூசும்பொழுது வாழ்க்கையில் நிம்மதியில்லாத சூழல் ஏற்படுமாம். சுண்டு விரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் கிரக தோஷங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மோதிர விரல் மற்றும் கட்டைவிரல் சேர்த்தபடி விபூதி எடுத்துப் பூசும்பொழுது, இந்த உலகம் நம் வசம் வரும். நாம் செய்யக் கூடிய எந்தவொரு செயலும், முடிவும், முயற்சியும் மிகப்பெரிய வெற்றியாகும் எனச் சொல்லப்படுகிறது. கோவிலில் இறைவனை தரிசித்ததும் விபூதி பிரசாதத்தை வாங்கும்போது இடக்கையைக் கீழேவைத்து வலக்கையை மேலே வைத்து வாங்கவேண்டும்.

விபூதியை இடக்கையால் வாங்கவோ அணியவோ கூடாது என்பது சாஸ்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விபூதியை இரு புருவங்களுக்கிடையில் வைக்கும்பொழுது அது மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள்வாங்கும் சக்தி விபூதிக்குண்டு எனச் சொல்லப்படுகிறது. மிகவும் சிறந்த கிருமி நாசினியாகவும், நெற்றியில் வடியும் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் விபூதியைச் சொல்கிறார்கள்.

கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டியதும் உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள். இப்படி வைக்கும் பொழுது அந்த விபூதி தலையில் இருக்கக் கூடிய ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை அன்றே நம்முடைய முன்னோர்கள் கண்டறிந்து அதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள். திருமணமாகாத பெண்கள் விபூதியைக் கழுத்தில் பூசி வரும்பொழுது விரைவில் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் கிட்டுமென சொல்லப்படுகிறது.

- கவிதா பாலாஜிகணேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT