ADVERTISEMENT

பிரதமர் வீட்டையும் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்... ரணில் எடுத்த முடிவு?

06:43 PM Jul 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசியலமைப்பு விதிகளின்படி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்தன தற்காலிக அதிபராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை உருவாக்க வேண்டும் என்றும், அதிபர் கோட்டாபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது.

ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுப்பதாக தகவல் வெளியாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அடுத்தபடியாக ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்குள் புகுந்துள்ளனர். முற்பகல் கோத்தபய ராஜ்பக்சேவின் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் தற்பொழுது ரணில் விக்ரமசிங்கே வீட்டை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகி, அனைத்து கட்சிகள் கொண்ட அரசு பதவியேற்க வழிவகை செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்கே சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவி விலகல் தொடர்பான தனது முடிவை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே. அதில் 'மக்களின் நலன் கருதி அனைத்து கட்சிகள் கொண்ட அரசைக் கொண்டுவர முடிவு செய்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT