பாகிஸ்தானில் கடந்த 18-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கு 20 பில்லியன் டாலர்கள் அளவு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்தடைந்தார்.
அதன்பின் நேற்று பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனை தொடர்ந்து முதலீடுகள் சம்மந்தமாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மான், “சவுதி அரேபியா ஏற்கனவே 44 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. தற்போது 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் முதலீடு மூலம் இந்தியாவுடன் நல்ல பொருளாதாரப் பிணைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், உற்பத்தி ஆகிய துறைகளில் சவுதி அரேபியா இந்த முதலீட்டை செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.