ஏற்கனவே குடியரசுத்தலைவர் காஷ்மீர் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாலும், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியுள்ளதாலும் காஷ்மீர் மாநிலம், மாநில அந்தஸ்தை இழந்து, யூனியன் பிரதேசமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் சட்டம் தொடர்பான அறிவிப்பு, மத்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியானது.
இந்நிலையில் மலாலா இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். “நான் சிறு குழந்தையாக இருந்தில் இருந்து காஷ்மீர் மக்கள் பிரச்சினையுடனேயே வாழ்கிறார்கள்.என் தந்தை மற்றும் தாய், என் தாத்தா,பாட்டி இளமையாக இருந்தபோதில் இருந்து காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது. தெற்கு ஆசியா எனது இல்லம். இந்த இல்லத்தில் காஷ்மீர் மக்கள் உட்பட 180 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதனால் காஷ்மீர் மக்களைப் பற்றி நான் அக்கறை கொள்கிறேன்.
ஆசியப்பிராந்தியம் என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், மதங்கள், மொழிகள், உணவுகள், வழிபாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. நம்மால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொண்டும், வேதனைப்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
நான் பெரும்பாலும் காஷ்மீர் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்துதான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். ஏனென்றால், இவர்கள்தான் வன்முறையாலும், சண்டையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எந்தவிதமான ஒப்பந்தம் வேண்டுமானாலும் இருக்கலாம், என்னுடைய நோக்கம், அனைத்தும் 70 ஆண்டுகளாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.