கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.