கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பியிருக்கிறது.
இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததையடுத்து, அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தியா 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்திருக்கிறது. இந்திய தூதர், இந்திய எண்ணெய் கழகத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் எரிப்பொருளை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் பிப்ரவரி 15- ஆம் தேதி அன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா- இலங்கையின் உண்மையான நண்பரும், உறுதியான பங்காளியும்! IOC ஆல் வழங்கப்பட்ட 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்களிடம் உயர் ஸ்தானிகர் அவர்கள் இன்றைய தினம் கையளித்தார். இலங்கையின் சக்தி பாதுகாப்பை நோக்கி இந்திய இலங்கை பங்குடைமை தொடர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.