Skip to main content

இதற்காகத்தான் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்கினார்களா???

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
petrol diesel


 

நாட்டின் பொருளாதாரம், விலைவாசி என அனைத்தையும் நிர்மாணிப்பது பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது 2018 ஜூலை 5ம் தேதியிலிருந்து அக்டோபர் 4ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது.  அதன்பின் அக்டோபர் 5 முதல் தற்போதுவரை(டிசம்பர் 1) குறைந்துகொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் மற்றும் குறைவிற்கு அந்நிய செலாவணியில் ஏற்பட்ட மாற்றம், கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இந்த விலை மாற்றத்தினூடே, இன்னொரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது...
 

(சென்னை விலையை அடிப்படையாகக்கொண்டது)  ஜுன் 16, 2017 அன்று முதல்தான் தினசரி விலைமாற்றம் அமலுக்கு வந்தது. அன்றைய பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.69.83, ரூ.59.22. 2017ன் முடிவில் பெட்ரோல், டீசல் விலை 72.53, 62.83. அதன்பின் மார்ச் 31ம் தேதியன்று அதாவது 2018ம் ஆண்டின் காலாண்டு முடிவில் பெட்ரோல், டீசல் விலை 76.29, 67.93, அதன்பின் அக்டோபர் 4ம் தேதி அன்றுமுதல்தான் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வைக் கண்டது. அன்றைய விலை 78.57, 71.24. அதன்பின் 94 நாட்கள் அதாவது அக்டோபர் 5வரை தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே இருந்தது. 94 நாட்களின் முடிவில் பெட்ரோல் விலை ரூ8.76 உயர்ந்து ரூ.87.33 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.8.65 உயர்ந்து 79.89 ஆக இருந்தது.

 

petrol


 

அதன்பின் டிசம்பர் 1வரை அதாவது 60 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் குறைவு காணப்படுகிறது.  டிசம்பர் 1 அதாவது இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை முறையே 75.62, 71.59. இவற்றிற்கிடையேயான வித்தியாசதொகை ரூ.11.91, ரூ.8.3.  இதிலென்ன என நீங்கள் நினைக்கலாம். தினசரி விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் பெட்ரோல், டீசல் இரண்டிற்குமான வித்தியாசத்தொகை ரூ8.54, 2017ன் முடிவில் ரூ9.7, இப்படியாகவே இருந்தது. தொடர்விலையேற்றம் தொடங்கிய தினமான ஜூலை 5ன் போது வித்தியாசதொகை 7.33, தொடர் விலையேற்றம் முடிவுக்கு வந்த தினமான அக்டோபர் 4 ம் தேதி பெட்ரோல், டீசல் இரண்டிற்குமான வித்தியாசதொகை ரூ.7.44. ஆனால் இன்றைய தின விலைப்பட்டியலின்படி (தொடர் விலைக்குறைப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில்) பெட்ரோல், டீசல் விலைகளில் உள்ள வித்தியாச தொகை ரூ.4.03 மட்டுமே.


தொடர் விலையேற்றத்தின் போது இரண்டும் தொடர்ந்து ஒரே சீரான நிலையில் ஏறிக்கொண்டிருந்தபோது குறையும்போது மட்டும் எப்படி இவ்வளவு வித்தியாசம் வந்ததுதான் சந்தேகத்திற்கு காரணம். ஒருவேளை பெட்ரோல், டீசல் விலையை சமப்படுத்துவதற்குதான் இந்த முயற்சியோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கச்சாஎண்ணெய்யில் உள்ள மாற்றம் என நினைக்கவேண்டாம், கச்சா எண்ணெய் என்பது பெட்ரோலியம்தான் இதில் பெட்ரோல் உள்ளிட்ட 20 பொருட்கள் கலந்திருக்கும். சுத்திகரிப்பு செலவிலும் இவ்வளவு பெரிய மாற்றம் வர சாத்தியமில்லை. அதனால் இதற்கான காரணம் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்களும், கண்காணிக்காமல் விட்ட அரசுகளும்தான் விளக்க வேண்டும்...


 

 

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.