துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு, அந்த சிறுமிக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள லிஃப்டிற்குள் சிறுவர்கள் 3 பேர் உள்ளே நுழைகின்றனர். அதில் ஒரு சிறுவன் தன் கழுத்தில் கயிறை சுற்றியபடி லிஃப்டிற்குள் வந்துள்ளான். நீளமான அந்த கயிறு பாதி லிஃப்டிற்கும் வெளியே இருந்துள்ளது. இதனை 3 சிறுவர்களும் கவனிக்காத நிலையில் லிஃப்ட் கீழ்நோக்கி சென்றுள்ளது. அப்போது சிறுவன் கழுத்தில் இருந்த கயிற்றின் மற்றோரு பக்கம் மேல்தளத்திலேயே சிக்கியுள்ளது. இதனால் அந்த சிறுவன் மேலே தூக்கப்பட்டு, கழுத்தில் கட்டப்பட்ட கயிறுடன் தொங்கியுள்ளான்.
அப்போது விரைந்து சென்ற அந்த சிறுமி, சிறுவனை தூக்கியவாறே லிஃப்டின் அவசர மணியை அழுத்தினார். உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. இதனால் சிறுவன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான். சிறுமி தனது சகோதரனை காப்பாற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கவனிக்க வேண்டுமென்ற கருத்தும் அதனுடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.