கடந்த 1989-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மத்திய போலீஸ் படையின் துணை கமிஷனராக இருந்த கெலின் வின்செஸ்டர் மர்ம நபரால் கொல்லப்பட்டார். அந்நாளில் இந்த கொலை ஆஸ்திரேலியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார் ஈஸ்ட்மேன். இந்த நிலையில் பல முறை அவர் மேல்முறையீடு செய்தும் நீதிமன்றம் அவரது மனுவை ஏற்க மறுத்தது.
ஒருவழியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இவரது மனுவை ஏற்ற நீதிமன்றம், மீண்டும் விசாரணையை தொடங்கியது. ஈஸ்ட்மேனை குற்றவாளி என நிரூபிப்பதற்காக போலீசார் சமர்பித்த ஆதாரங்கள் மிகவும் குறைவானவை என கூறி ஈஸ்ட்மேனை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் குற்றமே செய்யாமல் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தற்காக டேவிட் ஈஸ்ட்மேன் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரினார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஆஸ்திரேலியா அரசு உடனடியாக 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.34 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.