ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் அவர்கள் என்னவாகினர் என்ற தகவல்கள் கிடைக்கவேயில்லை. அதைத்தொடர்ந்து ஹர்ஜித் என்பவர், தான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தவன் என்றும், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்களை மீட்பதற்கான எல்லா வேலைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான வேலைகளிலும் அரசு ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.