அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள மல்லூர் எனும் பகுதியில் அரசுக்கு சொந்தமான சிப்காட் தொழில் வளாகத்திற்காக ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் நிலப்பகுதி உள்ளது. நேற்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், ஒரு வாலிபர் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக கீழப்பழுவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் உடல் கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன. எனவே மதுக் குடிக்கும் போது இளைஞருக்கும் அவருடன் மது குடித்த மற்றவர்களுக்கும் ஏற்பட்ட தகராற்றில் கொலை செய்யப்பட்டாரா எனும் கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். போலீசாரில் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் வேலைக்காக சிங்கப்பூர் செல்வதற்குப் பணம் செலுத்தி அங்கு செல்ல அவருக்கு விசா வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் சிப்காட் பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பொய்யூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.