ADVERTISEMENT

அணைக்கட்டில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி! 

08:59 AM Jan 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகன் சூர்யா (21). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார்.

கடந்த சில தினங்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக பெலாந்துறை அணைக்கட்டில் அதிக அளவில் மழைநீர் வந்தது. இதன் காரணமாக அணைக்கட்டில் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. இதனைப் பார்ப்பதற்கும் அணைக்கட்டில் குளிப்பதற்கும் இளைஞர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று (10/01/2021), சூர்யாவும் தனது நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சூர்யா குளித்து கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் சூர்யாவைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தனர்.


சுமார் ஒருமணி நேரமாக போராடிய நண்பர்கள், சூர்யாவை மீட்டு அங்கிருந்து பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த தனியார் மருத்துவர், சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூர்யாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். இதனால் சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன், சூர்யாவின் பெற்றோரிடம் சமாதானம் செய்து அவரது உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT