அதே போல வடகாட்டில் அஜித் ரசிகர்கள் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். அதே போல நெடுவாசல் கிராமத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை வழங்கியதுடன் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டை காண வந்த பொதுமக்களுக்கு மாமரத்து நண்பர்கள் குழுவினர் 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். அதே போல குளமங்கலம் வடக்கு திரு.வி.க மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாக்கள் நடத்திய இளைஞர்கள் பரிசு பொருளுடன் தலா ஒரு மரக்கன்று வழங்கியதுடன் விழாவைக் காண வந்த பொதுமக்களுக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
இது குறித்து இளைஞர்கள் கூறும் போது.. மரங்கள் அதிகமாக உள்ள பகுதியாக ஆலங்குடி தாலுகாவின் கிழக்குப் பகுதியான கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, குளமங்கலம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தது. ஆனால் புயலால் அத்தனை மரங்களும் ஒடிந்து நாசமானதால் மரங்களை வளர்த்த விவசாயிகள் மனமுடைந்துள்ளனர். அதனால் விரைவில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒவ்வொரு கிராம இளைஞர்களும் களமிறங்கி உள்ளோம். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இனிமேல் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்குவதுடன் அந்த கன்றுகளை மக்கள் பராமரிக்கவும் செய்து வருகிறோம். அதே போல பொது இடங்களில் இளைஞர்களே மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் என்றனர்.