Skip to main content

ஒடிந்த 3 லட்சம் பலா மரங்கள்;நிலைகுலையும் புதுக்கோட்டை விவசாயிகள்!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கஜா புயலின் தாக்கத்தால் சுமார் 3 லட்சம் பலா மரங்கள் முற்றிலும் ஒடிந்து நாசமானதால் தங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

trees

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், புள்ளாண்விடுதி, செரியலூர், சேந்தன்குடி, நகரம், பனங்குளம், குளமங்கலம், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு  முன்புவரை வழக்கமான விவசாயங்களே செய்யப்பட்டு வந்தது. 

 

அதன் பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியதால் பலன் தரும் மரங்கள் வளர்ப்பை தொடங்கினார்கள் விவசாயிகள். அந்த வகையில் தான் முதலில் வாழை பயிரிடத் தொடங்கிய விவசாயிகள் வரப்பு ஓரங்கள், மற்றும் தோட்டங்களில் பலாக் மரக்கன்றுகளை வைத்து வளர்க்கத் தொடங்கினார்கள். அதேபோல தென்னை கன்றுகளும் நடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மற்ற பயிர் விவசாயங்களை நிறுத்திவிட்டு மரங்களை மட்டுமே கவனிக்கத் தொடங்கினார்கள். 

 

trees

 

அந்த வகையில் ஒரு ஏக்கர் விவசாயநிலத்தில் தென்னை, பலா, எழுமிச்சை, மிளகு என்று ஊடுபயிர்களும் வளர்க்கப்பட்டு வந்தது. அதனால் கீரமங்கலம் மற்றும் வடகாடு சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பலா மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது.

கீரமங்கமலம், வடகாடு சுற்றியுள்ள கிராமங்களில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 100 டன் வரை பலா பழங்கள் உற்பத்தியானது. இங்கு உற்பத்தியாகும் பலா பழங்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும்  ஏற்றுமதி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கிய போது அந்தப் பகுதியில் பலா மரங்கள் சேதமடைந்ததால் அவர்கள் ஏற்றுமதி செய்த பகுதிகளுக்கும் கீரமங்கலம் பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

 

கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதி பலா பழங்களின் சுளை நிறமும், சுவையும் அதிகமாக இருப்பதால் சென்னை கோயம்பேடு முதல் பல்வேறு பேருந்து நிலையங்களிலும் வடகாடு பலா என்று சொல்லி வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். எட்டுக்குடி முருகன் கோயில் திருவிழாவிற்கு மட்டும் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு பகுதியில் இருந்து சுமார் 300 டன் வரை பலாப் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் இப்படி ஒரு மகசூலையும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் தந்த பலா மரங்கள் சாய்ந்து கிடப்பது அப்பகுதி விவசாயிகளின் வாழவதாரத்தையும் சாய்த்தது என்றே கூறலாம்.  

 

 

புள்ளாண்விடுதி விவசாயி அம்மாக்கண்ணு கூறும் போது.. 

 

எனக்கு தென்னையும், வாழையும், பலாவும், சோளமும் விவசாயம் செய்திருந்தேன். இப்ப அத்தனையும் அழிந்துவிட்டது. தென்னை, பலாவை நம்பி வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பலா மரங்களில் காய்க்கும் காய்களை மட்டும் பறித்துக் கொள்ள வியாபாரிகள் வந்து முன்பணம் கொடுத்து விவசாயிகளிடம் வாங்கிச் செல்வார்கள். பல விவசாயிகள் தங்கள் மரங்களில் விளையும் பலாப் பழங்களை தாங்களே பறித்து கமிசன் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். இதனால் பலஆயிரம் பேருக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் இப்போது மரங்கள் அத்தனையும் ஒடிந்து நாசமானதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. 

 

 

மறுபடியும் விவசாயிகள் பழைய நிலைக்கு வரப ல ஆண்டுகள் ஆகலாம். வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறோம் என்றவர்.. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மரங்களும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் தற்போது தென்னை மரங்களை மட்டும் கணக்கெடுக்கிறார்கள். பலா மரங்களை கணக்கெடுக்கவில்லை. அதற்கு வேறு அதிகாரி வரனுமாம். அவர்கள் எப்ப வந்து கணக்கெடுக்கிறது. நாங்கள் தோட்டங்களை எப்ப சுத்தம் செய்றது. ஒரே அதிகாரி அனைத்து மரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

''என் மரணமே கடைசியாக இருக்கட்டும்; கருணைக் கொலை செய்யுங்கள்'' - மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

mettupatti number 9 tamarind tree

வணக்கம்,

 

நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..

 

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.

 

நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.

 

mettupatti number 9 tamarind tree


 

ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.

 

மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.

 

இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.