ADVERTISEMENT

காதலியை பார்க்க சென்ற மாணவர் மரணம்..! விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை..!

12:27 PM Jun 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள ஸ்ரீ நெடுஞ்சேரி எனும் ஊரைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் 22 வயது தேவராஜ். இவர், தொலைதூரக் கல்வி மூலம் கல்லூரி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் (19.06.2021) மாலை தன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், தேவராஜனை பல இடங்களில் தேடி அலைந்தனர்.

அப்போது அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் தன்னுடைய காதலியைப் பார்த்துவிட்டு வருவதாக அருகிலுள்ள சாவடி குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேவராஜ் உறவினர்கள் சாவடி குப்பம் கிராமத்திற்குச் சென்று தேடியுள்ளனர். அங்கு உள்ள விநாயகபுரம் சாலை பகுதியில் கல்லறை தோட்டம் அருகே தேவராஜ் சென்ற இரு சக்கர வாகனம் நின்றுள்ளது. அதன் அருகில் உள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்புகள், செல்ஃபோன், மூக்குக்கண்ணாடி மற்றும் அவரது இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவையும் அப்பகுதியில் கிடந்தன.

ஆனால், தேவராஜனை காணவில்லை. இதனால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேவராஜின் சகோதரர் தீயரசன், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்ததோடு, ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்து அவர்கள் உதவியுடன் தேவராஜ் இருசக்கர வாகனம் நின்றிருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை 2 மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி உள்ளனர். ஆனால், அதில் தேவராஜன் உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அருகில் உள்ள மற்றொரு கிணற்றில் தேடியபோது அவரது உடல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையில் தேவராஜ் தன் காதலியைப் பார்க்கச் சென்றபோது மாயமாகிவிட்டதால், அவரை யாரோ கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால், நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை செய்தனர். "தேவராஜ் என்னை சந்திக்க வருவதாக செல்ஃபோன் மூலம் கூறினார். அதன்படி அவர் வருகைக்காக நான் ஓரிடத்தில் காத்திருந்தேன். ஆனால், அவர் வெகுநேரமாகியும் அங்கு வரவில்லை. அதனால் நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார். காதலியைத் தேடி வந்த தேவராஜன், கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தேவராஜன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து போட்டுள்ளனரா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT