ADVERTISEMENT

பெண் விவசாயி கொலை; போலீசார் விசாரணை

12:54 PM Dec 30, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 35). இவர் அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன மூன்று ஆண்டுகள் கழித்து முனியப்பன் இறந்துவிட்டதால், தனித்திருந்த ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது கணவர் ராமகிருஷ்ணனும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் பிறகு வெங்கனூரிலேயே தங்கி தனியாக வசித்து வந்த ராசாத்தி தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வயலில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ராசாத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராசாத்தி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசாத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ராசாத்தி அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தை நாகராஜன் திருப்பிக் கேட்டபோது, தான் கடன் வாங்கவே இல்லை என்று ராசாத்தி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராசாத்தி கொலை நடந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT