ADVERTISEMENT

கணவரின் மிரட்டல்; மரண வாக்குமூலத்தில் உண்மையைச் சொன்ன மனைவி

12:38 PM Nov 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சங்கீதா(24). இவர், அதே பகுதியில் உள்ள காட்டேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரைக் காதலித்துள்ளார். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சங்கீதாவும் முத்துக்குமரனும் குடும்பத்தினரை மீறி ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு மற்றும் ஒன்றரை வயதுகளில் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், முத்துக்குமரன் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி மாலை சமைப்பதற்கு அரிசி வாங்கி வரும் படி சங்கீதா, கணவர் முத்துக்குமரனிடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், முத்துக்குமரன் அந்தப் பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கி குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சங்கீதா, தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். மீண்டும் முத்துக்குமரன் மறுநாள் குடிப்பதற்கு சென்றுள்ளார்.

இனிமேல் கணவரைத் திருத்த முடியாது என்று மனமுடைந்த சங்கீதா, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்துள்ளார்.

அவர் இறப்பதற்கு முன்பு காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது அவர், “வீட்டில் கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கணவர் திருந்த வேண்டும் என்பதற்காகவும், கணவரை மிரட்டும் நோக்கத்திலும் என் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிப்பது போல் பாவனை செய்தேன். அப்போது வீட்டுக்குள் வந்த என் கணவரே என் உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் படுகாயம் அடைந்து நான் அலறி துடித்தேன். எனது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், என் கணவர் என்னுடன் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் சண்டை போட்டதால் என்னுடன் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது என் கணவர் நான் தீக்குளித்தது தொடர்பாக போலீசிடமோ, நீதிபதியிடமோ, மருத்துவரிடமோ தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னைப்போலவே குழந்தையையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து நான் மருத்துவரிடம் பொய்யான வாக்குமூலம் அளித்தேன். நான் இப்போது கூறுவது தான் உண்மை” என்று இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சங்கீதாவின் தந்தை சக்திவேல், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் உடலில் கணவரே தீவைத்து கொலை செய்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT