“உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பலப்பரீட்சையாக இருந்தது. திமுகவினர், வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அதிமுகவினரோ, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, முதல்வர், துணை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களின் ஆலோசனையைப் பெற்று, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.
பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான். பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் பலமும் என்னவென்று தெரியும். 25 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு திமுக போட்டியிடுவது கேவலமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து நின்றுதான் இத்தனை இடங்களில் வென்றுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு அதிமுக தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் யாருடைய தோல்விக்கும் யாரும் காரணமல்ல. அமமுக பெற்ற வாக்குகளினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் மிகவும் நேர்மையாக நடந்திருக்கிறது. ஒரு சதவீதம் கூட முறைகேடு நடக்கவில்லை. யாருடைய வெற்றியிலும் யாரும் தலையிடவில்லை. அப்படி அதிமுக தலையிட்டிருந்தால், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சி வேட்பாளர்கள் கம்மல், மூக்குத்தி, தாலியையெல்லாம் அடகு வைத்துத்தான் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற்றவரைத் தோற்றுவிட்டார் என்று அறிவிப்பது எத்தனை கேவலமானது. இதுபோன்ற ஈனத்தனமான செயலில், என்னைப் போன்றவர்கள் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.
ரகசியக் கூட்டம் நடத்தி திட்டம்(?) தீட்டப்போவது குறித்தெல்லாம், பேட்டியிலேயே அமைச்சர் பகிரங்கமாக வெளிப்படுத்துவதை என்னவென்று சொல்வது?