ADVERTISEMENT

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தை... உணவுக்குப் பிச்சை எடுக்கும் அவலம்..!

04:38 PM Dec 29, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ளது மேல் பாப்பம்பாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது சின்னப்பன். இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு கார்த்திகேயன், நரேன் என்று இரு மகன்கள் உள்ளனர்.


இவர்கள் இருவரும் குழந்தைகளாக இருந்தபோதே, அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சின்னப்பன் மனைவி ராஜாமணி இறந்துபோனார். 20 வருடங்களாக தன் இரு மகன்களையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். அதோடு தனக்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை, சில வருடங்களுக்கு முன்பு தனது மகன்களுக்கு எழுதி கொடுத்துள்ளார்.


இதில், இரண்டாவது மகன் நரேனை, பிசியோதெரபி மருத்துவம் படிக்க வைப்பதற்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தற்போது நரேன், படித்து முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, நரேன் தனது தந்தை சின்னப்பனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, தனது படிப்புக்காக வாங்கப்பட்ட கடனையும் அடைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதனால், மனவேதனை அடைந்த முதியவர் சின்னப்பன், தங்குவதற்கு இடமின்றி, சாப்பிட உணவின்றி அப்பகுதியில் உள்ள கோவில்களில் தங்கி உணவுக்காகப் பிச்சை எடுத்துச் சாப்பிட்டு வந்துள்ளார். தான் பெற்றுவளர்த்த பிள்ளைகள், உயர்வான நிலைக்குச் சென்ற பிறகு, வீட்டை விட்டு அனுப்பியது சின்னப்பனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.


இப்படிப்பட்ட நிலையில் அவர், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையைச் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், "தனக்கு மகன்களிடமிருந்து இழப்பீடு வாங்கித் தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். இவரது மனுவைப் படித்துப் பார்த்த அதிகாரிகள், சின்னப்பனுக்கு நீதி கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT