ADVERTISEMENT

வெளவால்களை பாதுகாக்க பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் ஊர் மக்கள்

03:09 PM Oct 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம் கோடந்தூர் பகுதியில் வெளவால்களை தெய்வமாக நினைத்து வழிபடும் ஊர் பொதுமக்கள், வெளவால்களை பாதுகாப்பதற்காக தீபாவளி நாட்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒன்றாகவும், பசுமையான மரங்கள் அதிகம் இல்லாத பகுதியாகவும் இருக்கிறது க. பரமத்தி. இந்த ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமத்தில் ராஜலிங்க மூர்த்தி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் அமைந்துள்ளது. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் ரம்மியமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக அனைத்தும் மரத்திலிருந்து தலைகீழாக தொங்கியபடி உறங்குகிறது.

பொதுவாக பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில் தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால் அதிக வெயில் அடிக்கும் பகுதியில் அதுவும் மரங்களே இல்லாத வறண்ட பகுதியை ஆயிரக்கணக்கான வெளவால்கள் தங்களின் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சரியம்.

அபூர்வமான பறவைகளை யாரும் எந்த இடையூறும் செய்யாமல் பாதுகாத்தால் தமிழ்நாடு மற்றும் இந்தியா மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். குஜராத் மாநிலத்தில் வெளிநாடுகளில் இருந்து சிறுத்தைகளை அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும். கோடந்தூர் பகுதியில் வெளவால்களை செல்லப் பிராணியாகவும் தெய்வமாகவும் நினைத்து அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் நல்லசாமி கூறுகையில், “கோடந்தூர் கோவிலின் சிறப்பு என்றால் வெளவால்கள் மட்டும்தான். வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு வெளவால்கள் இருக்காது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் வசிக்கிறது. உணவுக்காக மாலை 7 மணிக்கு இங்கிருந்து சென்று சுமார் 300 கிலோ மீட்டர் வரை குறிப்பாக கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உணவுகளை சாப்பிட்டுவிட்டு காலை நேரத்தில் எங்கள் பகுதிக்கு வந்து சேர்ந்துவிடும். நாங்களும் எந்த தொந்தரவும் செய்வதில்லை மற்றவர்களையும் எந்த தொந்தரவும் செய்ய விடமாட்டோம். யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக தீபாவளி நாட்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை. வெளவால்கள் இந்தப் பகுதியில் உள்ள கோவிலைச் சுற்றியுள்ள மரங்களில் மட்டும்தான் தங்குகிறது. வேறு எந்த இடத்திலும் தங்குவதில்லை” இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட வெளவால்கள் உள்ளதாகக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT