தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. இதையடுத்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது. இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.
அதில், கேப்டன் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சீரியசாக இருப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அவர் நன்றாக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் நலமுடன் ராஜாபோல இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை. அவர் சீரியசாக இருந்தால் நான் அப்பாவுடன் இருக்க வேண்டும். ஆனால் நான் வேலை விசயமாக நெல்லூர் வந்து இருக்கிறேன். தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?
என் தந்தையை அம்மாவும் நாங்களும் அக்கறையுடன் பார்த்து வருகிறோம். நாங்கள் எங்களை பார்ப்பதைவிட அப்பாவை பார்ப்பதுதான் அதிகம். அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. மீண்டும் கேப்டன் வருவார் எல்லோர் முன்பும் நிற்பார். மீண்டும் சிங்க நடை போட்டு வருவார். அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும். அதனால் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
அவரவருக்கு சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவர் சீக்கிரம் வருவார். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார் என உருக்கமாக பேசினார்.