ADVERTISEMENT

விற்பனைக்காக மனிதச் சடலங்கள் ஆயிரக்கணக்கில் ஸ்டாக் வைப்பு! தமிழக அரசுக்குத் தெரியுமா? வேல்முருகன் கேள்வி

11:57 AM Feb 26, 2018 | rajavel


மய்ய வர்த்தகம் செய்யும் சேவை மய்யம்! விற்பனைக்காக மனிதச் சடலங்கள் ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைப்பு! காஞ்சி மாவட்டம் பாலேஸ்வரத்திலுள்ள தாமஸ் என்பவரின் சேவை மய்யம்தான் அது என்பது தமிழக அரசுக்குத் தெரியுமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

என்ஜிஓ அதாவது சேவை மய்யம், அரசியலுக்கும் வந்துவிட்டது. காரணம் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் வெளிநாட்டுக் கரன்சிதான்.

பெயர்தான் சேவை மய்யம்; ஆனால் நடப்பதோ வர்த்தகம்!

அது எந்த வர்த்தகமாகவும் இருக்கலாம்; வகைதொகையற்ற ’பணம்’ வர்த்தகத்தின் மூலம்தானே சாத்தியம்!

அதனால்தான் யாருமே செய்யாத, போட்டியே இல்லாத மய்ய வர்த்தகத்தை அதாவது பிண வியாபாரத்தைத் தேர்வு செய்திருக்கிறார் தாமஸ்!

கேரளாவைச் சேர்ந்தவரான இந்த தாமஸ், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக தன் சேவை மய்யத்தை நடத்திவருகிறார்.

ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதித்தோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தன் சேவை மய்யத்தில் வைத்து பராமரித்துவருகிறார்.

இந்த சேவை மய்யத்துக்குள் வந்த அவர்கள் பிறகு எப்போதுமே வெளியே செல்ல முடியாது என்று தெரியவருகிறது.

இது புகாராக எழுந்து, 2015ல் காஞ்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி அந்த சேவை மய்யத்தைக் கள ஆய்வு செய்தார்.

அப்போது இறந்த மனித உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டுவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்தச் சடலங்கள் எதற்கும் மருத்துவ ஆவணங்களோ முறையான சான்றிதழ்களோ இல்லை. சேவை மய்யம் எச்சரிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

2017 செப்டம்பரோடு சேவை மய்யத்தின் உரிமம் முடிவுக்கு வந்தது; அதற்குப் பிறகும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் அது இயங்குவது தெரிந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த 20ந் தேதியன்று காலை 11 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு அந்த சேவை மய்யத்திற்குச் சொந்தமான ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது.

அதில் ஒரு மூதாட்டி, ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’என்று அலறிக்கொண்டே சென்றார். அதைப் பார்த்த பைக்கில் சென்ற இளைஞர் பிரபு அந்த ஆம்புலன்சை மறித்தார். அதன் ஓட்டுநர் ராஜேஷுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேஷுக்குத் துணையாக மேலும் பொதுமக்கள் அங்கு வந்து கூடினர்.

அந்த மூதாட்டியை விசாரித்து, ஆம்புலன்சையும் சோதனை செய்தனர்.

மூதாட்டி திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பதும் அது போலியான ஆம்புலன்ஸ் என்றும் தெரிந்தது.

ஆம்புலன்சின் உள்ளே சுயநினைவில்லாத நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும் இருந்தார். அவர் அருகே ஒரு சடலம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. காய்கறி மற்றும் அரிசி மூட்டைகளும் இருந்தன. அந்த சடலத்துக்கும் எந்த ஆவணமும் சன்றிதழும் இல்லை.

பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து காவலர்களிடம் ஆம்புலன்சை ஒப்படைத்தனர்.

இந்தச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்து பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையம் முன் கூடினர். சேவை மய்யத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைத்தான் கலைந்துபோகச் சொன்னது. மக்கள் மறுக்கவே, தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது காவல்துறை. அதோடு ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்தார் என்று சொல்லி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞரைப் பிடித்துக் காவலில் வைத்தது.

இதை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞரை விடுவிக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறையினர் அவர்களை அவமதித்து, அவர்களின் செல்போன்களையும் பறித்து, மூவரையும் செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்று, இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 148, 341, 294(பி), 506(1), டி.பி.பி.3(1), ஆகிய பிரிவுகளில் பொய்வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.

குற்றம் செய்தவர்களை விடுத்து புகார் கூறியவர்களையே பொய்வழக்குப் போட்டுச் சிறையிலடைத்த இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக அவர்களை விடுதலை செய்திட வலியுறுத்துகிறது.

உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கப்படாமல் சேவை மய்யம் என்று நடத்தும் தாமஸ், ’1590 உடல்கள் பாதாள பிண அறையில் உள்ளதாக’ ஊடகத்திற்கு பேட்டியே அளித்துள்ளார்.

அப்படியிருக்க, பிணக்குவியலால் காற்று மாசுபட்டுச் சுற்றுச்சூழல் பாதித்துச் சுகாதாரம் சீர்கெட்டு நோய்கள் பரவும் ஆபத்திற்கு என்னதான் நடவடிக்கை?

இறந்தவர்களின் உடல் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT