Skip to main content

’’இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாமா வேலை பார்க்கிறது! ’’- பட விழாவில் கொந்தளித்த வேல்முருகன் 

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
tau

 

 

இயக்குனர் அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ள 'தடை அதை உடை' என்ற  இசை ஆல்பம் இன்று வெளியானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசியது...

 

’’நேற்று முன் தினம் என் மீதும், பழ. நெடுமாறன், சீமான் உள்ளிட்ட 27 தோழர்கள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொண்டர்கள் மத்தியில் எங்கேயோ ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு குற்றவாளியாக அறிவிக்கிறார்கள். இது எல்லாம் ஏற்புடைய செயல் அல்ல. தூத்துக்குடியில் இன்று துப்பாக்கிச் சூட்டை  நடத்தியிருக்கிறார்கள். அறவழி, அமைதி போராட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தடை கோருகிறார்கள், மதுரை உயர்நீதிமன்றம் மறுக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நள்ளிரவில் 144 தடை விதித்து போராட்ட உணர்வை சிதைக்கிறார்கள். கதிராமங்களத்தில் 365 நாட்களாக அமைதி அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு  மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 27 நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

 

இன்றைக்கு அந்தப் போராட்ட களத்தில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. தடையின் காரணமாக வெளியில் தலைவர்கள் யாரும் போகவில்லை. அந்தத் தடையை நாங்க மதிக்கிறோம். உள்ளூர் மண்ணின் மைந்தர்களை ஆண்டாண்டு காலமாக போராடுகிற மக்களை தடைவிதிப்பதற்கு உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது? ஒரு தனிநபருக்காக ஒரு தனி முதலாளிக்காக உயர் நீதிமன்றம் மறுத்த பிறகு அரசு தடை விதித்து இருக்கிறது. உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தடைவிதித்தால் நாங்கள் கட்டுப்படுவோம். வேண்டுமென்று திட்டமிட்டு பன்னாட்டு முதலாளிகளிடம் பல கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்  கொண்டு போராடுகின்ற மக்களை தடி கொண்டு அடித்து, மண்டையை உடைத்து, கை, கால்களை உடைகின்ற இந்த ஆணவ, அராஜக காவல் துறைக்கு மக்கள் மிக விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

 

t2

 

நாங்கள் தொடர்ந்து போராடித் தான் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து இருக்கிறோம். தொடர்ந்து எல்லோரும் போராடி ஜ.பி.எல்.-ஐ நிறுத்திருக்கிறோம். தொடர்ந்து போராடித் தான் go back modi trending ஆக்கிருக்கிறோம். சொந்த நாட்டு மக்களே சொந்த நாட்டு பிரதமரை இந்த நாட்டுக்கு வரமால் தடுத்து இருக்கிறோம். அப்போது ஒரு அரசு சுயமரியாதை,தன்மானம், இருக்கு என்று சொன்ன பிரதமரை தரைவழி மார்க்கமாக வரவிடமால் வான்வெளி மார்க்கமாக வரவிட்டார்களே.  இந்திய நாட்டு பிரதமர் இதை அவமானமாக உணர வேண்டும். ஆகவே அரசுக்கு வெட்கம், மானம், சுடு, சுரணை, ரோஷம் எதுவும் இல்லை. காவல் துறையைக்கொண்டு ராணுவத்துறையை கொண்டு கதிரமங்களத்தை ஒடுக்கி வருகிறார்கள். எங்கே அரசு பயங்கரவாதம் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு அடக்க  நினைத்தாலும் அது அடங்கியதாக எந்த வரலாற்றிலும் இல்லை.

 

நாங்கள் கேட்டது காவிரி மேலாண்மை வாரியம். ஆணையம் அல்ல. பல் இல்லாத, அதிகாரம் இல்லதா ஆணையம் இல்லை. ஆனால் அந்த ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அந்த ஆணையத்தில் கூட நடுவர் உச்சநீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நிகராக அதிகாரமற்ற ஆணையமாக அது அமைக்கப்படுகிறதா? இல்லையா? இந்த ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த போகிறதா? இல்லையா? என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. ஏன் உச்சநீதிமன்றத்தின் நீதி அரசர்கள் இந்த ஆணையத்தின் உத்தரவை மதிக்கவில்லை என்று சொன்னால் அதை நடைமுறைப்படுத்த கூடிய அதிகாரம் இந்த ஆணையர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? ஆனால் அவர்கள் திறந்துவிடவில்லை என்றால் மத்திய அரசிடம்  போ என்கிறார்கள். மத்திய அரசுதான் எங்களுக்கு தண்ணியே தரமாட்டேன் என்கிறார்கள். இது தமிழர்களுக்கான தீர்ப்பா?

 

சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்துகிறவர்கள் எல்லோர் மேலயும் வழக்கு போடுவார்களா? சுங்கச்சாவடியில் வேல்முருகன் கடப்பாறையில் குத்தினால், ஓங்கி அடித்து உடைத்தார் என்று போடுகிறீர்கள். நான் காரில் உட்கார்ந்து இருக்கிறேன். எதற்கு இந்த பொய் வழக்கு போடுகிறார்கள்? இதை கேட்க ஒரு ஊடகம் ஒரு பத்திரிக்கை இல்லை?

 

ராமேஸ்வரத்தில் நீட் என்கிற கை விலங்கு போட்டு ஒரு திறந்தவெளி காந்தி சிலையில் உட்கார்ந்துகொண்டு நீட் என்பது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவர் செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை நாசமாக்கற பொசுக்குகிற மோசமான நீட்.  அது கூடாது என்பதற்க்காக அந்த நீட் என்னும் விலங்கு உடைக்கப்பட வேண்டும் என்பதற்காக கந்தசாமி உயிரிழந்த காரணத்தினால் நாங்கள் அமைதிவழி போராட்டம் கேரளாவில் நடத்தினோம். அவர்களை பிடித்து என் கட்சி தொண்டர்களை 15 நாள் சிறையில் வைத்திருக்கிறார்கள். என்ன அரசாங்கம் இது? ஆகவே இந்த அரசு என்பது ஒரு அடுக்கு முறை அரசு, ஒரு கொடுங்கோல் அரசு, காவல்துறையை கொண்டு ராணுவத்தை கொண்டு போராடுகின்ற மக்களை பொய் வழக்குபோட்டு சிறை பிடித்து அதன்மூலமாக இன்றைக்கு பண்ணாட்டு நிறுவனங்களுக்கு ஒரு மாமா வேலை பார்க்கிறது. இதை எப்படி நாங்க பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியும்?. நாங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் இந்த இயக்குநர்களும் சேர்ந்து தலைமை செயலாளரை சந்திக்க போகிறோம். சந்தித்து,  ஜனநாயக படுகொலை பற்றியும், தமிழக மக்களின் மீதான தடியடி, பொய்வழக்கு இவற்றையெல்லாம் சொல்லுவோம். மீண்டும் அவர்கள் இதையே செய்வார்கள் என்று சொன்னால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே போராடுவேன்” - வேல்முருகன் எம்.எல்.ஏ

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

velmurugan struggle on behalf of against sipcot factories in Cuddalore

 

கடலூரில்  சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.

 

கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து நேற்று(10.10.2023) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் போராட்டத்தை கைவிடுமாறு கூறப்பட்டது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

 

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இந்த நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், காலை கடலூர் உழவர் சந்தை பகுதியில் திரண்டனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ  தலைமை தாங்கி சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான கண்ணன் வரவேற்று பேசினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஆனந்த்,  மாநகர மாவட்டச் செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ரசாயன உற்பத்திகளை செய்து வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு மர்மமான நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை திறந்த வெளியில் கையாள்வதால் அதன் துகள்கள் படர்ந்து 250 மடங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாகக் கூறி பொதுமக்களின் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி 10 ஆண்டுகள் தொழில் நடத்திவிட்டு, பின்னர் அந்த இடத்தை மனை வணிகமாக மாற்று தொழில் செய்து வருகின்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. அந்த இடத்தில் வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகள் அல்லது கால்நடை பண்ணையுடன் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக அந்த இடங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விரட்டியடிக்கப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் சைமா என்ற பெயரில் பெரியப்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடங்கும் வேலை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகிறது. அந்த நிறுவனம் இங்கு தொடங்கப்படக்கூடாது. பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சுடு நீராக்கி கடலில் விடுவதால் கடல் நீர் மாசு படுவதோடு, கடல்வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது.

 

மாசு ஏற்படுத்தும் ஆலைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று விகிதம் ஏற்படுத்தாமல் அடிமையாக வேலை வாங்கி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பிவிட்டு, தகுதி உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தொழிற்பேட்டை அருகே முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஆலைகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்ல கூறிவிட்டனர். இதற்கான பலனை எதிர்காலத்தில் அரசுகள் அனுபவிக்கும். சட்டமன்ற உறுதிமொழி குழு மூலம் ஆய்வு செய்து பல குற்றச்சாட்டுகள் வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த வேல்முருகன், அதில் ஒன்றை கூட மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சரி செய்யவில்லை. அதற்கான கால அவகாசம் அளித்து தான் இந்த போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.

 

மேலும், கூட்டணி கட்சியில் இருந்தாலும் எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு வேல்முருகன் களத்தில் நிற்பான் என்பதற்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி நானே பூட்டுப் போடும் போராட்டத்தை முன்னெடுப்பேன். சாதி வாரி கணக்கெடுப்புக் கோரி ஜனவரி மாதம் கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கான சமூக நீதி வழங்க வேண்டும். அதுவரை 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என்றார்.