ADVERTISEMENT

நடுரோட்டில் வைத்து வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக் கொலை...

02:58 PM Mar 07, 2020 | kirubahar@nakk…

உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை காரில் விரட்டி வந்த மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே இருக்கும் குள்ளப்ப கவுண்டன்பட்டி சேர்ந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் ரஞ்சித் குமார், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரஞ்சித் குமார் தனது குடும்பத்துடன் கம்பத்தில் வசித்து வந்துள்ளார். அவர் தினசரி நீதிமன்றத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். அப்படி நேற்று மாலை நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கம்பம் சென்றபோது ஒரு மர்ம கார் அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்துள்ளது. அப்போது பூமாலை தியேட்டர் அருகே ரஞ்சித்குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மர்ம கார் மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ரஞ்சித்குமார். காரில் இருந்து இறங்கிய கும்பல் ஓட ஓட விரட்டி ரஞ்சித்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின் அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது. அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில், சிவப்பு நிற காரில் வந்த கும்பல் ரஞ்சித்குமாரை வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி சின்னகண்ணு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயாரானது. அதை கண்ட அவரது உறவினர்கள் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே வக்கீல் ரஞ்சித் குமார், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என உத்தமபாளையம் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தான் இப்படி நடுரோட்டிலேயே வழக்கறிஞரை அந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். அப்படி இருக்கும் போது வக்கிலை சினிமாவில் வருவதைப்போல காரில் மோதி விட்டு கீழே இறங்கி சரமாரியாக வெட்டியது அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். கொலைக்கு முன்விரோதமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT